ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகள்.. ஒப்புகை வாக்குச்சீட்டு எந்திரம் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு
டெல்லி: ஒப்புகைச் சீட்டு எந்திரத்தை அனைத்து வாக்குச் சாவடிகளில் பயன் படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையில் 22 எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. குறிப்பாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைப்பது, வாக்குப் பதிவு மையங்களை உருவாக்குவது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
இந் நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சியினர் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், ஒப்புகைச் சீட்டு எந்திரத்தை அனைத்து வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
அதற்கான மனுவை அவர்கள் தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோராவிடம் அவர்கள் வழங்கி உள்ளனர். குழுவில் மல்லிகார்ஜூன கார்கே, அனந்த்சர்மா, சந்திரபாபு உள்ளிட்டோர் இருந்தனர். திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி, இ.கம்யூ சார்பில் டி. ராஜா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஆணையரை சந்தித்த பின் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும்.
அதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒப்புகை சீட்டு வழங்குவதை கடைப்பிடிக்கவேண்டும். 50 சதவீதம் வாக்குப் பதிவு எந்திரங்களில் ஒப்புகை வாக்குச்சீட்டு கருவியை பொருத்த வேண்டும் என்று கூறினார். பேட்டியின் போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் இருந்தனர்.