மேகதாது அணை, பெங்களூர் குடிநீர் பஞ்சம்- காவிரி ஆணையக மீட்டிங்கில் பஞ்சாயத்தை கூட்டப் போகும் கர்நாடகா
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இன்றைய காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை மற்றும் பெங்களூர் குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றை கர்நாடகா எழுப்பக் கூடும் என தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி நதிநீர் பகிர்வுக்காக அமைக்கப்பட்டது காவிரி மேலாண்மை ஆணையம். காவிரி ஒழுங்காற்று குழுவானது கர்நாடகா அணைகளைப் பார்வையிட்டு நீர் இருப்பை ஆய்வு செய்து தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீரை திறந்துவிடலாம் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கும். இப்பரிந்துரையின் அடிப்படையில் விவாதித்து தமிழ்நாட்டுக்கான நீர் பகிர்வு உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநில அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
காவிரி ஒழுங்காற்று குழுவானது தமிழ்நாட்டுக்கு 2.8 டிஎம்சி நீரை திறக்க கடந்த 21-ந் தேதி பரிந்துரைத்தது. ஆனால் கர்நாடகாவோ குடிநீர் பஞ்சம் இருக்கிறது; காவிரி நீரை திறக்க இயலாது என கூறியது. கர்நாடகாவின் பெங்களூர் குடிநீர் பஞ்சம், சர்வதேச தலைப்புச் செய்தியாகவும் மாறிவிட்டது.
அதேபோல காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட அனுமதிக்கமாட்டோம் என தமிழ்நாட்டில் ஆளும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. இதற்கு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்கிறது கர்நாடகா.
இதனால் இன்றைய காவிரி ஆணையக் கூட்டத்தில் பெங்களூர் குடிநீர் பஞ்சம், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது ஆகியவற்றை கர்நாடகா எழுப்பும். ஆனால் இந்த விவகாரங்களை விவாதிக்க அதிகாரமே இல்லாதது காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.












Click it and Unblock the Notifications