2ஜி வழக்கு- ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான சிபிஐ அப்பீல் ஏற்பு- அக்.5 முதல் தினமும் விசாரணை!
டெல்லி: 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் கோரிக்கைகளை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டது. இதன்படி வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் தினமும் வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை மேல் முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு, சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

ஆ. ராசா
2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்பட 17 பேரை கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து இருந்தது.

மேல்முறையீடு
இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018, மார்ச் 19ஆம் தேதி அமலாக்கப் பிரிவும், சிபிஐயும் தனித்தனியாக மேல்முறையீடு செய்தன. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர் நீதிமன்ற பிரிஜேஸ் சேத்தி வரும் நவம்பர் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். இந்த வழக்கில் சிபிஐ தரப்பு தனது வாதத்தை முடித்துக் கொண்டது. ஆனால், அதன் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொடர்ந்து வழக்கை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

தாமதம்
இந்த நிலையில் நீதிபதி பிரிஜேஸ் சேத்தி ஓய்வு பெறுவதால், வேறு நீதிபதி அமர்வுக்கு மாறினால் மேலும் தாமதம் ஏற்படலாம் என்ற நோக்கத்தில், சிபிஐ, அமலாக்கப் பிரிவு இரண்டு அமைப்புகளும் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.

அரசு செலவு
இந்த வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் கடந்த 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், "நீண்டகாலமாக அரசின் செலவில் நடந்து வரும் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

பாதிக்குமா
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் மீண்டும் இந்த வழக்கு பூதாகரமாக வெடிக்குமா அல்லது முன்பு போல் புஷ் என்று போகுமா என்பது தெரிய வரும். ஏற்கனவே இந்த வழக்கில் 2017 டிசம்பர் 21ஆம் தேதி 2ஜி வழக்கில் இறுதி தீர்ப்பை நீதிபதி சைனி வெளியிட்டார். ஆ.ராசா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் இதே வழக்கு விசாரிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications