Exclusive: நாடாளுமன்றத்தில் முதல் நாள் எப்படி இருந்தது? புதிய பயணத்தை விவரிக்கும் எம்.பி.க்கள்!
டெல்லி: தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 3 புதிய உறுப்பினர்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் முதல்நாள் அனுபவம் எப்படி இருந்தது என்பதை அறிவதற்காக திமுக எம்.பி.க்கள் எம்.எம். அப்துல்லா, ராஜேஷ்குமார், கனிமொழி சோமு ஆகிய மூவரிடமும் நாம் பேசினோம்.
அப்போது அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல் பின்வருமாறு;

கனிமொழி சோமு
''பேரறிஞர் அண்ணா உறுப்பினராக இருந்த மாநிலங்களவையில் நானும் உறுப்பினராக உள்ளே நுழைந்த போது உடல் புல்லரித்துவிட்டது. எனது தந்தை ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக இருந்ததால் எனக்கு டெல்லி புதிதாக தெரியவில்லை. அப்பா அமைச்சராக இருந்த போது சிறுவயதில் இங்கு பலமுறை வந்திருக்கிறேன். இன்று அந்த பழைய நினைவுகள் எல்லாம் நெஞ்சில் நிழலாடியது. எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்ட நிகழ்வை முதல் நாளே பார்த்தது எனக்கு ஷாக்காக இருந்தது. முரசொலி மாறன் அங்கிளின் சிலையை நாடாளுமன்றத்தில் கண்டதும் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் சிறுவயதில் நான் பார்த்து வியந்த மனிதர்களில் அவரும் ஒருவர். புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். தலைவருக்கும், உதயநிதிக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு டெல்லியில் அரசு வீடு ஒதுக்கியுள்ள நிலையில் அதில் புனரமைப்பு பணிகள் முடிய இன்னும் 2 மாதகாலம் ஆகும் எனக் கூறிவிட்டார்கள்.'' இவ்வாறு கனிமொழி சோமு எம்.பி. தனது அனுபத்தை பகிர்ந்தார்.

எம்.எம்.அப்துல்லா
''விவாதங்களின்றி அவையை நடத்த முயன்றதால் பல முறை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. முதல்நாளே இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்றும் எதிர்பார்க்கவில்லை. நேரு, அபுல்கலாம் ஆசாத், அம்பேத்கர், அண்ணா போன்ற பெரிய பெரிய ஆளுமைகள் எல்லாம் அலங்கரித்த இந்த அவையில் நானும் இன்று உறுப்பினராக உள்ளே நுழைந்திருக்கிறேன் என்றால் அந்த உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் உடல் சிலிர்த்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இன்னும் முறையாக எனக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை. இடைவெளிவிட்டுத் தான் அமர வேண்டியிருந்ததால் அருகில் யாரிடமும் பேசமுடியவில்லை. திருச்சி சிவா அண்ணன் போன்ற சீனியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி சொல்லிக்கொடுத்துள்ளார்கள். நிச்சயம் எனது செயல்பாடுகள் தலைவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும்.''

ராஜேஷ்குமார்
''ஒரு சாதாரண தொண்டனை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகுபார்த்த தலைவருக்கும், உதயநிதி அண்ணனுக்கும் என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன். முதல்நாள் ராஜ்யசபா நிகழ்வில் பங்கேற்றதால் எனக்கு கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. இருப்பினும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றேன். வரலாற்று சிறப்புமிக்க இந்தியாவின் உயர்ந்த இடத்தில் நானும் இருக்கிறேன் என நினைக்கும் போது அந்த உணர்வை உங்களிடம் சொல்லத் தெரியவில்லை. ஒத்தி வைப்பு காரணமாக முழுதாக இன்று மாநிலங்களவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியாமல் போனது. முதல்நாளே இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. முதல் நாள் சரி, இனி வரும் நாட்களில் தமிழக உரிமைகளுக்காக எனது குரல் தொடர்ந்து இங்கு ஒலிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.''

3 பேரும் யார்?
திமுக ராஜ்யசபா எம்.பி.க்களாக பதவியேற்ற 3 பேரும் கட்சியில் வெவ்வேறு பொறுப்புகளில் இருக்கின்றனர். ராஜேஷ்குமார் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். கனிமொழி சோமு திமுக மருத்துவரணி மாநில நிர்வாகியாக உள்ளார். எம்.எம்.அப்துல்லா திமுக அயலக பிரிவு அணியில் மாநில பொறுப்பு வகிக்கிறார்.
-
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
Kanimozhi: சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? எந்த தொகுதியில் களமிறங்க வாய்ப்பு? -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!












Click it and Unblock the Notifications