Corona: மாசக் கடைசியில் "இந்த" 3 மாநிலங்களில் தினசரி கேஸ்கள் புதிய உச்சம்.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை!
டெல்லி: இந்தியாவில் ஜனவரி மாதத்தில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 7 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 222 நாட்களில் இது உச்சபட்சமாகும்.
தினசரி பாசிட்டிவிட்டி ரேட்டும் 9.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. அது போல் இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 3,600ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, கோவா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கும் வார இறுதி ஊரடங்கும் அமலாகியுள்ளன.

கொரோனா உச்சம்
இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை தொடங்கி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் அறிவித்துள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸின் போக்கு குறித்து இந்திய அறிவியில் நிறுவனம் மற்றும் இந்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இது இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் என்பது குறித்து விவரித்துள்ளது.

தினசரி கேஸ்கள்
சிவா ஆத்ரேயா, ராஜேஷ் சுந்தரேசன் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று இந்தியாவில் ஜனவரி மாதம் இறுதியிலும் பிப்ரவரி மாதம் தொடக்கத்திலும் நாள்தோறும் கொரோனாவால் 10 லட்சம் பேர் வரை பாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. அது போல் ஜனவரி இறுதியில் நாளொன்றுக்கு மகாராஷ்டிராவில் 1.75 லட்சம் கேஸ்களும் கர்நாடகாவில் 1.20 லட்சம் கேஸ்களும் கேரளாவில் ஒரு லட்சம் கேஸ்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் தினசரி கேஸ்கள் உச்சம்
அது போல் உத்தரப்பிரதேசம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் தினசரி கேஸ்கள் 80 ஆயிரமாகவும் டெல்லியில் 70 ஆயிரமாகவும் இருக்கும். ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தினசரி கேஸ்கள் தலா 50 ஆயிரத்தை தாண்டும். பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் 35 ஆயிரம் பேருக்கு நாளொன்று கொரோனா பாதிப்பு ஏற்படும்.

மேகாலயா
வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாமில் 12 ஆயிரத்திற்கு மேலும் நாகாலாந்தில் 700 -க்கு மேலும் கேஸ்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மணிப்பூர், மேகாலயா, திரிபுராவில் நாளொன்றுக்கு 2000 கேஸ்களும் மிசோரமில் 4000 கேஸ்களும் அருணாச்சலில் 1200 கேஸ்களும் சிக்கிமில் 1000 கேஸ்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பிரதமர் மோடி உரை
இந்த நிலையில் வரும் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறுகின்றன. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில்தான் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 5 மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் உச்சத்தை தொடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா பரவல் குறித்தும் அதற்கான கட்டுப்பாடுகள் குறித்தும் அறிவிக்கிறாரா என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications