பஹல்காம் அட்டாக்: 3 பயங்கரவாதிகளையும் கொன்றுவிட்டோம்! லோக்சபாவில் அமித்ஷா தகவல் -சிக்கியது எப்படி
டெல்லி: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று அமித்ஷா கூறினார். இந்த 3 பயங்கரவாதிகள் எப்படி கொல்லப்பட்டனர்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தில் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்த விவாதம் தொடங்கியது. இன்று இந்த விவாதம் தொடர்ந்து வருகிறது. லோக்சபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா இன்று விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுபற்றி அமித்ஷா லோக்சபாவில் கூறியதாவது:
‛‛இந்திய ராணுவம், சிஆர்பிஃஎப் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஆகியோர் இணைந்து ‛ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து அழிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர்.
அப்பாவிமக்களை அவர்களின் குடும்பத்தினரின் முன்னிலையில் மதத்தை கேட்டு கொன்றவர்களுக்கு தண்டைன வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்துக்கு அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.
அதாவது நேற்றைய தினம் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையை ராணுவம், சிஆர்பிஎஃப், ஜம்மு காஷ்மீர் போலீசார் ஸ்ரீநகர் அருகே லிடாஸ் பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் 3 பேர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்கள்.
லஷ்கர் இ பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சுலைமான் ஷா என்பவன் தான் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நிலையில் நேற்று சுட்டு கொல்லப்பட்டான். இவன் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி உள்ளான். ஹசீம் மூசா என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வந்தான். அதேபோல் இன்னொரு பயங்கரவாதியான அபு ஹம்சா மற்றும் யாசீர் ஆகியோரும்கொல்லப்பட்டனர். இவர்களும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் தான் அதனை அமித்ஷா உறுதி செய்துள்ளார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் இறந்தனர். நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஹல்காமுக்கு சுற்றுலா சென்வர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து குடும்பத்தினரின் கண்முன்னே இறந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பாகும். இந்த தாக்குதலை தொடர்ந்து மே 7 ம்தேதி நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. மே 7 ம் தேதி ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை நம் படை வீரர்கள் அழித்தனர்.
இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. நம் நாடும், பாகிஸ்தானும் மாறி மாறி தாக்குதல் நடத்தினர். நம் நாட்டின் துல்லிய தாக்குதல்கள் பாகிஸ்தானின் போர் விமானங்கள், ராணுவ தளம், விமானப்படை தளங்களை அழித்தது. மாறாக பாகிஸ்தானின் ஏவுகணை, ட்ரோன்கள் வானிலேயே அழிக்கப்பட்டது. நம் நாடு அடித்த அடியில் பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. மோதல் வேண்டாம் என்று மண்டியிட்டது. இதையடுத்து போர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தான் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து லோக்சபாவில் விவாதம் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்த விவாதம் இன்றும் தொடர்ந்து வருகிறது. நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றிய நிலையில் இன்று காலையில் அமித்ஷா உரையாற்றினார். இதையடுத்து இன்று மாலையில் பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications