உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரே நேரத்தில் 3 பெண் நீதிபதிகள் பொறுப்பேற்பு !
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக 3 பெண்கள் நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்கள் மூவருடன் சேர்த்து ஏற்கெனவே உள்ள ஒரு பெண் நீதிபதியுடன் தற்போது உச்சநீதிமன்றத்தில் 4 பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய நியமனங்களுடன் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. ஒரே ஒரு பதவி காலியாக உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். ஆனால் தற்போது 24 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதை அடுத்து வேறு எந்த நியமனமும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் நீதிபதி என். வி. ரமணா தலைமையில் லலீத், கான்வில்கர், சந்திரசூட், நாகேஸ்வர ராவ் ஆகியோரை கொண்ட கொலீஜியம் குழுவானது 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளின் பெயர்களை உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

24 ஆக குறைந்தது
கடந்த 12 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆர்எஃப் நாரிமன் ஓய்வு பெற்றார். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்திருந்தது. கொலீஜியம் பரிந்துரையில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஷ்வரி, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகர்த்தனா, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

ஒரே நேரத்தில் 9 நீதிபதிகள்
ஒரே நேரத்தில் 9 பேரின் பெயர்கள் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த நிலையில் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட 3 பெண்கள் உள்பட 9 நீதிபதிகளும் இன்றைய தினம் பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் ஹிமா கோலி, பிவி நாகர்த்தனா, பெலா திரிவேதி ஆகிய 3 பெண்கள் ஆவர்.

9 நீதிபதிகள் யார் யார்
- நீதிபதி ஏஎஸ் ஓகா
- நீதிபதி விக்ரம் நாத்
- நீதிபதி ஜே கே மகேஷ்வரி
- நீதிபதி ஹிமா கோலி
- நீதிபதி பிவி நாகர்த்தனா
- நீதிபதி சிடி ரவிக்குமார்
- நீதிபதி எம்எம் சுந்தரேஷ்
- நீதிபதி பெலா திரிவேதி
- நீதிபதி பிஎஸ் நரசிம்மா
இவர்களில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அரசு கூடுதல் வழக்கறிஞரான பி எஸ் நரசிம்மா உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து நேரடி நியமன அடிப்படையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு பெண்
இதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு பெண் நீதிபதியுடன் சேர்ந்து மொத்தம் 4 பெண் நீதிபதிகள் உள்ளனர். இந்த 4 பேருடன் சேர்த்து உச்சநீதிமன்ற வரலாற்றில் இதுவரை 11 பெண்கள் நீதிபதிகள் கிடைத்துள்ளனர். இது வரலாற்று சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். அதிலும் ஒரே நேரத்தில் 3 பெண்கள் நியமிப்பதும் இதுதான் முதல் முறையாகும். இந்த 9 நீதிபதிகளுடன் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் உள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

யார் இந்த ஹிமா கோலி
நீதிபதி ஹிமா கோலி 2006 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்தார். பின்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு உயர்ந்தார். தற்போது இவர் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் செப்டம்பர் 2, 2024 ஆம் ஆண்டு வரை ஆகும்.

நீதிபதி நாகர்த்தனா
நீதிபதி பிவி நாகர்த்தனா- முன்னாள் இந்திய தலைமை நீதிபதி ஈஎஸ் வெங்கட்ராமையாவின் மகளாவார். இவர் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர். வரும் 2027 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாகர்த்தனா இந்திய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு அவர் நியமிக்கப்பட்டால் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமை கிடைக்கும். இந்திய தலைமை நீதிபதி வரலாற்றில் இதுவரை அப்பதவியை பெண் அலங்கரிக்கவில்லை என்ற கவலை இவர் மூலம் நீங்கும். பதவி மூப்பு அடிப்படையில் அவர் நியமிக்கப்பட்டாலும் அவர் இந்திய தலைமை நீதிபதியாக 36 நாட்கள் மட்டுமே பதவியில் இருப்பார். கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நாகர்த்தனாவுக்கு கடந்த 27 ஆம் தேதி நடந்த பிரிவு உபச்சார விழாவில் அவர் உணர்வுப்பூர்வமாக பேசியிருந்தார்.

நீதிபதி பெலா திரிவேதி
நீதிபதி பெலா திரிவேதி - குஜராத் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பின்னர் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு இடமாற்றப்பட்டார். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை இவர் குஜராத் மாநில அரசின் சட்டத் துறை செயலாளராக பதவி வகித்தார். தற்போது உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்ற இவரது பதவிக்காலம் ஜூன் 10, 2025 ஆகும்.












Click it and Unblock the Notifications