ஒரே மருத்துவமனையில் 37 டாக்டர்களுக்கு கொரோனா.. தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாஸிட்டிவ்!
டெல்லி: டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் 37 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
தடுப்பூசி போட்டுக் கொண்ட இளைஞர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா 2-வது அலை
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக வீசி வருகிறது. கொரோனா முதல் அலையை விட தற்போது தினமும் 90,000- க்கு மேல் தினசரி பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், கேரளா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 10 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 84.21 சதவீதம் உள்ளன.
டெல்லியில் அதிவேக பாதிப்பு
இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் வியாழக்கிழமை 7,437 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 24 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் டெல்லியில் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
37 மருத்துவர்களுக்கு தொற்று உறுதி
டெல்லியில் சர் கங்கா ராம் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு 37 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த 37 மருத்துவர்களில் 32 பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று
சர் கங்கா ராம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்பட்ட காரணமாகியுள்ளது. இந்த மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இளைஞர்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி செலுத்தி இருந்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.