கொரோனா 2ஆம் அலையில் 420 மருத்துவர்கள் பலி.. டெல்லி, பீகாரில் மட்டும் 196 டாக்டர் உயிரிழந்த பரிதாபம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் மட்டும் 100 மருத்துவர்கள், பீகாரில் 96 மருத்துவர்கள் உட்பட மொத்தம் 420 மருத்துவர்கள் கொரோனா 2ஆம் அலையில் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
நாட்டில் கொரோனா உயிரிழப்புகளும் மிக மோசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, முன்களப் பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
குறிப்பாகத் தலைநகர் டெல்லி, கொரோனா 2ஆம் அலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருந்தது. அதேபோல படுக்கைகள் கிடைக்காமலும், ஆக்சிஜன் உதவி கிடைக்காமலும் பலர் உயிரிழந்த சபம்வங்களும் அரங்கேறின. தற்போதுதான் கொரோனா பரவலின் தீவிர தன்மை மெல்லக் குறைந்து வருகிறது.
420 மருத்துவர்கள்
இந்நிலையில், கொரோனா 2ஆம் அலையில் மட்டும் 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் மட்டும் 100 மருத்துவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதேபோல பீகாரில் 96 மருத்துவர்களும் உத்தரப் பிரதேசத்தில் 41 மருத்துவர்களும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் கேகே அகர்வால் கடந்த திங்கள்கிழமை கொரோனாவால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மருத்துவர்கள் உயிரிழப்பு
ஒட்டுமொத்தமாக நாட்டில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து இதுவரை 748 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ சங்கம் தனது 3.5 லட்சம் உறுப்பினர்களின் தரவுகளைக் கொண்டே இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளதால், உயிரிழப்புகள் மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மருத்துவ சங்கம்
இது குறித்து இந்திய மருத்து சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் கூறுகையில், "கொரோனா 2ஆம் அலை மிக மோசமான பாதிப்பை அனைவருக்கும் ஏற்படுத்துகிறது. குறிப்பாகக் களத்திலிருந்து போராடும் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.