இது வேறயா? மோடியிடம் கனடா மோதல் பற்றி நேரடியாக பேசிய ஜோ பிடன்.. பரபரப்பு சம்பவம்! என்ன நடந்தது?
டெல்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்தியாவிற்கு எதிராக பேசிய நிலையில், அதற்கு முன்பே அமெரிக்க அதிபர் பிடன் இந்த விவகாரத்தில் தலையிட்டதாக கூறப்படுகிறது. ஜி 20 மாநாட்டிலேயே இந்த சம்பவம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் நடைபெற்ற ஜி 20 மாநாடு பெரிய வெற்றிபெற்றது. இந்த மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதிகாரப்பூர்வ G20 இணையதளத்தின்படி, 18வது G20 உச்சி மாநாட்டின் தீம் "வசுதைவ குடும்பகம்". இது "ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்று மொழிபெயர்க்கப்படும் சமஸ்கிருத சொற்றொடர் ஆகும். பழங்கால சமஸ்கிருத இலக்கியங்களில், குறிப்பாக மகா உபநிடதத்தில் இந்த சொற்றொடர் இருந்தது. மனிதர்கள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் உட்பட அனைத்து உயிர்களின் மதிப்பையும், பூமி மற்றும் பரந்த பிரபஞ்சத்தில் நாம் எல்லோரும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த கூட்டம் நடந்தது.
ஜி20 டெல்லி உச்சி மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை உள்ளடக்கியது (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி , யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம். இதில் தற்போது ஆப்ரிக்கா இணைக்கப்பட்டு உள்ளது.
என்ன பேசினார்? : இந்த ஜி 20 மாநாட்டில்தான் கனடாவில் காலிஸ்தான் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டது குறித்து கனடா அதிபர் ட்ரூடோ பிரதமர் மோடியிடம் பேசி உள்ளார். அப்போதே அமெரிக்க அதிபர் பிடனும் இது தொடர்பாக மோடியிடம் பேசி உள்ளார் என்கிறார்கள்.
கனடாவில் காலிஸ்தானி தீவிரவாத தலைவரின் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடா கூறியது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் பிற தலைவர்கள் இந்த மாதம் G20 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியிடம் கவலை தெரிவித்தனர் என்று பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஃபைவ் ஐஸின் உறுப்பினர்கள் - அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உளவுத்துறை அமைப்பை சேர்ந்த தலைவர்கள்.. ஜோ பிடன் உட்பட 5 தலைவர்கள் பிரதமர் மோடியிடம் இந்த விவகாரத்தை பேசி உள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்கு பிரதமர் மோடி என்ன பதில் சொன்னார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
மோதல் மேல் மோதல்: கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் இந்தியாவிற்கும் கடந்த 10 வருடங்களாகவே ஏழாம் பொருத்தம்தான். ஜி 20 மாநாட்டிலேயே அவருக்கும் இந்தியாவிற்கும் நிறைய மனஸ்தாபங்கள் ஏற்பட்டது.
இந்தியா கொடுத்த ஹோட்டல் ரூமை மறுத்தது, இந்தியாவில் அவரின் விமானம் வேலை செய்யாமல் போனது., இந்தியா கொடுத்த விமானத்தை ஏற்க மறுத்தது, ஜி 20 மாநாட்டில் பொதுவான சந்திப்புகளில் ட்ரூடோ ஓரம்கட்டப்பட்டது என்று கடுமையான மோதல்கள் ஏற்பட்டன.
அதோடு இல்லாமல் அதற்கு முன்பே ஒருமுறை இந்தியா வந்த ட்ரூடோவை வரவேற்காமல் இந்தியா அரசு தவிர்த்தது. இந்தியாவில் சாதாரண டூரிஸ்ட் போல பாதுகாப்பு கூட இல்லாமல் ட்ரூடோ ஊர் சுற்றிவிட்டு கடைசியில் சர்ச்சையானதால் மரியாதைக்கு பிரதமர் மோடியுடன் சந்திப்பு நிகழ்த்திய சம்பவங்கள் கூட நடந்தன. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா கொடுத்த ஆதரவுதான் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு நாட்டு மோதல் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது. சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார்.
அவர் வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார்.

இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
.கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார்.
ஜோ பிடன்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவிற்கு எதிராக குற்றஞ்சாட்டி இருந்த நிலையில் உலக நாடுகளை இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக ஒன்று திரட்ட கனடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அவர் உலக நாட்டு தலைவர்களுடன் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கனடா பிரதமர் ட்ரூடோ, காலிஸ்தானி சார்பு தலைவர் நிஜார் கொலையை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோரிடம் எழுப்பினார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications