EVM-யில் வேட்பாளரின் போட்டோ இடம்பெறும்.. சட்டசபை தேர்தலில் புதிதாக அமல் - அறிவித்த தேர்தல் ஆணையம்
டெல்லி: தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரிக்காக சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலை வெளிப்படையாக நடத்தும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இவிஎம் எனும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம்பெறுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதியை அறிவித்தார்.

இந்த வேளையில் தேர்தலை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் சில முக்கிய விஷயங்களை அவர் பகிர்ந்தார். அந்த வகையில் இவிஎம் எனும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
"வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் EVM-யில் இடம்பெறும். அவரது முகம் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக புகைப்பட இடத்தின் நான்கில் மூன்று பங்கு முகத்தால் ஆக்கிரமிக்கப்படும். வாக்குச்சீட்டில் அச்சிடப்படும் புகைப்படம் 2 செமீ அகலமும் 2.5 செமீ உயரமும் கொண்டதாக இருக்கும். இது பீகார் சட்டசபை தேர்தலில் அமலானது. இப்போது மீண்டும் கொண்டு வரப்பட உள்ளது.
வேட்பாளர்களின் வரிசை எண்கள் மற்றும் நோட்டா (NOTA) உள்ளிட்டவை தெளிவாகத் தெரியும் வகையில் தடித்த எழுத்துருவில் (Size 30) அச்சிடப்பட வேண்டும் என இந்த வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன. தேர்தல் நடத்தை விதிகள், 1961இன் விதி 49பி இன் கீழ் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன'' என்றார்.
இதற்கு முன்பு தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வரிசை எண், வேட்பாளரின் பெயர், கட்சியின் சின்னம் மட்டுமே இடம்பெறும். வேட்பாளரின் போட்டோ இடம்பெற்றது இல்லை. இப்போது முதல் முறையாக இடம்பெற உள்ளது.












Click it and Unblock the Notifications