வாழ்வா? சாவா? 5 மாநில சட்டசபை தேர்தல்கள்- வரிந்து கட்டும் பாஜக, காங்- பரபரக்கும் டெல்லி ஆலோசனைகள்!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு முந்தைய அரை இறுதி ஆட்டமாக பார்க்கப்படும் இந்த ஆண்டு நடைபெறும் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றியை அறுவடை செய்வதற்கான ஆலோசனை கூட்டங்களை பாஜகவும் காங்கிரஸும் டெல்லியில் மேற்கொண்டு வருகின்றன.
அண்மையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. இத்தேர்தலில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு இது மிகப் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக- காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி உள்ளது. அதுவும் 2018 சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் வென்றது. ஆனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழித்து தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் ஆளும் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சிக்கு வலிமையான போட்டியை தருவதற்கு காங்கிரஸ், பாஜக இரண்டுமே முயற்சிக்கின்றன. மிசோரமில் காங்கிரஸ் கோலோச்சிய காலம் இருந்தது. வீழ்த்தப்பட்ட காங்கிரஸ் மீண்டும் எழுமா? என்பதும் எதிர்பார்ப்பு.
இத்தகைய பின்னணியில் 5 மாநில சட்டசபை தேர்தல்களை நாடு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக 5 மாநில தேர்தல்கள் நடைபெறுகின்றன. விளையாட்டுப் போட்டிகளில் செமி பைனல்- அரை இறுதி ஆட்டம் போல 5 மாநில தேர்தல்கள் கருதப்படுகின்றன.
இந்த 5 மாநில தேர்தல்களில் எப்படியும் வாகை சூடுவது என்பதில் பாஜக, காங்கிரஸ் ஆகியவை தெளிவாகவும் தீவிரமாகவும் உள்ளன. பிரதமர் மோடி டெல்லியில் நேற்று பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 5 மாநில தேர்தல் வெற்றியின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதேபோல 2024 லோக்சபா தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முதல்வர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications