ஆத்தீ... தமிழகத்தில் 50% தொகுதிகளில் பணம் விளையாடுமாம்!
டெல்லி : தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகுதிகளில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணம், மதுபானங்கள், கூப்பன்கள் அல்லது மற்ற இலவசங்களை கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் இதே நிலை தான் என்றாலும், தமிழகத்தில் தான் அதிக தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கண்டறிந்து இந்திய தேர்தல் கமிஷனே எச்சரித்துள்ளது.

தமிழகம் தான் டாப்
தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகியவற்றில் 272 தொகுதிகளில் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 118 தொகுதிகளில் பணம் விளையாட வாய்ப்புள்ள தகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தாராள பண பட்டுவாடா
புதுச்சேரியில் 30 தொகுதிகளும், பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கடும் போட்டியை சந்திக்கும் மேற்குவங்கத்தில் 47 தொகுதிகளிலும், அசாமில் 52 தொகுதிகளும், கேரளாவில் 25 தொகுதிகளும் பணம் விளையாட வாய்ப்புள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. நேர்மையான, வெளிப்படையான தேர்தல் நடத்த கடும் சவாலாக இருக்கும் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷனும் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

தேர்தலே நிறுத்தப்பட்ட வரலாறு
தமிழகத்தில் இதற்கு முன் சட்ட விரோதமாக அதிக அளவில் பணப் பட்டுவாடா நடைபெற்றதாக 2019 ல் வேலூர் தொகுதியில் லோக்சபா தேர்தலும், 2017 ல் ஆர்கே நகர் தொகுதியில் இடைத் தேர்தலும் நிறுத்தப்பட்டன. 2017 ல் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் ரொக்க பணமும், இலவசங்களும் அதிகமாக பரிமுதல் செய்யப்பட்டது. ரூ.112 கோடிக்கும் அதிகமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், கடைசி நிமிடத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

அனைத்து துறைகளும் இணைந்துள்ளன
2019 லோக்சபா தேர்தலின் போதும் அனைத்து தொகுதிகளிலும் பண பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பும், வாகன சோதனையும் நடத்தப்பட்டது. தேர்தல் செலவினங்கள் கண்காணிக்க அதிகாரிகள் குழுவும் அமைக்கப்பட்டது. இதே முறை தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. வருமான வரித்துறை, போலீஸ், மாநில வரித்துறை, வருவாய் புலனாய்வு குழு, போதை தடுப்பு பிரிவு உள்ளிட்ட துறைகளையும் கண்காணிப்பு பணியில் தேர்தல் கமிஷன் ஈடுபடுத்தி உள்ளது.

தீவிர வாகன சோதனை
தமிழகத்தில் ஏற்கனவே பல இடங்களில் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத பணம் கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டு வருகிறது. ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக நத்தம் சீனிவாசன் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications