வெறும் 48% செயல்பட்ட ராஜ்யசபா.. பெரும்பாலான நேரத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள்.. ஆனால் ஒரு குட் நியூஸ்
டெல்லி: கடந்த ஒரு வாரத்தில் ராஜ்யசபா மொத்தம் செயல்பட வேண்டிய நேரத்தில் வெறும் 48 சதவீதம் மட்டுமே செயல்பட்டுள்ளது. குறிப்பாக முதல் 4 நாட்கள் ராஜ்யசபாவின் பெரும்பாலான நேரம் முடங்கியது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவ. 29ஆம் தேதி தொடங்கியது, அப்போது கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக் கூறி 12 எதிர்க்கட்சி எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்,
இருப்பினும், கடந்த கூட்டத்தொடரின் செயல்பாடுகளை வைத்து தற்போது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின,

எம்பிக்கள் சஸ்பெண்ட்
தங்கள் செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவிக்கும் வரை சஸ்பெண்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட மாட்டாது என்று ராஜ்ய சபா தலைவர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். மேலும், அவையின் நன்மை கருதியே இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எதிர்க்கட்சி எம்பிக்கள் மன்னிப்பு கேட்டால், இடைநீக்கத்தை ரத்து செய்வது குறித்து பரீசிலனை செய்யப்படும் என்றார்.

எதிர்க்கட்சிகள் போராட்டம்
இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்பிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். குளிர்காலக் கூடத்தொடர் முடியும் வரை இதேபோன்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். அதேபோல மற்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் மாநிலங்களவையில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

வெறும் 48%
இந்நிலையில், கடந்த வாரம் ராஜ்யசபா திட்டமிடப்பட்ட நேரத்தில் வெறும் 47.70 சதவீதம் மட்டுமே செயல்பட்டதாக நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை திட்டமிடப்பட்ட நேரத்தைத் தாண்டி 33 நிமிடங்கள் சபை நடந்துள்ளது. இதன் மூலம் அவையின் இந்த வார ஒட்டுமொத்த உற்பத்தி நேரம் 49.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவை முறையே 95 சதவிகிதம் மற்றும் 100 சதவிகிதம் இயங்கியுள்ளது.

2ஆண்டுகளில் முதல்முறை
கடந்த வெள்ளிக்கிழமை ராஜ்யசாபா முழுவதுமாக திட்டமிடப்பட்ட நேரமான 2.5 மணிநேரம் செயல்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2020 பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பிப்ரவரி 7ஆம் தேதி திட்டமிட்டபடி அனைத்து அலுவல்களும் நடந்தது. அதன் பிறகு திட்டமிட்டபடி அனைத்து அலுவல்களும் நடப்பது இதுவே முதல்முறையாகும். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் ராஜ்யசபாவில் இரண்டு மசோதாக்கள் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, அணை பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications