இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் காலநிலை மாற்றம்! 5.48 கோடி குழந்தைகள் பாதிப்பு! ஷாக்
டெல்லி: உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக சுமார் 5.48 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் தெரிவித்திருக்கிறது.
யுனிசெஃப் என்பது, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக செயல்படும் ஒரு ஐக்கிய நாடுகளின் நிறுவனமாகும். காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் குழந்தைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பை தற்போது யுனிசெஃப் வெளியிட்டிருக்கிறது.

அதில், "இந்தியாவில் உள்ள குழந்தைகள் வெப்ப அலை மற்றும் காற்று மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களால் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கின்றனர். இது அவர்களின் உடல்நலம், பள்ளி வருகை மற்றும் ஒட்டுமொத்த கற்றலை மோசமாக பாதிக்கிறது.
2024ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 5.48 கோடி குழந்தைகள் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீவிர வானிலை நிகழ்வுகள், வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் சூறாவளி போன்ற பிற இயற்கை பேரழிவுகளுடன் இணைந்து, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பள்ளிகளுக்கு பரவலான அழிவையும் ஏற்படுத்தியுள்ளன.
காலநிலை ஆபத்து குறியீட்டில் 163 நாடுகளில் இந்தியா 26வது இடத்தில் உள்ளது. எனவே காலநிலை மாற்றக் கல்வியை தேசிய பாடத்திட்டத்தில் ஒருங்கிணைப்பதற்காக இந்திய அரசாங்கத்துடன் நெருக்கமாகப் நாங்கள் (யுனிசெஃப்) பணியாற்றி வருகிறோம். இந்த முயற்சி விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், காலநிலை தொடர்பான சவால்களைச் சமாளிக்க மாணவர்களைத் தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக அளவில், 2024 ஆம் ஆண்டில் வெப்ப அலைகள் மிகவும் குறிப்பிடத்தக்க காலநிலை ஆபத்தாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இது உலகளவில் 17.1 கோடி மாணவர்களைப் பாதித்திருக்கிறது" என்று யுனிசெஃப் தெரிவித்திருக்கிறது.
காலநிலை மாற்றம் என்றால் என்ன?
புவி வெப்பமயமாதல் காரணமாக காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. பூமியிலிருந்து எடுக்கப்படும் பெட்ரோல், டீசல் போன்ற புதைப்படிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் கரியமில வாயு உருவாகிறது. இந்த வாயு பூமியிலிருந்து எளிதில் வெளியேறுவது கிடையாது. அதற்கு பதில் பூமியின் வளிமண்டலத்தை சுற்றி வந்துக்கொண்டிருக்கிறது. இதனால் சூரியனின் வெப்பம் பூமியிலிருந்து வெளியேற முடியாமல் இருக்கிறது. இப்படி இருப்பதால் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது.
அதிக வெப்பம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளை உருக்குவதால் காலநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதாவது, எதிர்பாராத வெள்ளம், புயல், மழை, சூறாவளி, முன்கூட்டியே கணிக்க முடியாத வானிலை ஆகியவை இந்த காலநிலை மாற்றத்தால் ஏற்படுபவைதான். இந்தியாவும் தற்போது காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இணைந்திருப்பது புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் அனைவரும் அறிந்ததுதான். இந்த வெள்ள பாதிப்புகள் ஏராளமான உயிர்களை பறித்தது. மட்டுமல்லாது, மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. அதேபோல இந்தியாவில் நடந்தால், இந்தியா கடுமையாக பாதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications