வட மாநிலங்களில் தொடரும் தீ விபத்துக்கள்.. டெல்லி மருத்துவமனை கருகிய சோகம்! 6 குழந்தைகள் பலி
டெல்லி: டெல்லியில் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வரும் நிலையில், தீ விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. நேற்று டெல்லியில் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதி முழுவதையும் புகை மண்டலமாக மாற்றியது. கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை மருத்துவமனையில் இரவு 11.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து 12 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டரில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல டெல்லியின் ஷாஹ்தாரா பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இங்குள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த தீயை அணைக்க 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. கட்டிடத்திலிருந்து 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
வடமாநிலங்களில் குறிப்பாக டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. எனவே தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், விபத்து ஏற்பட்டால் அதை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications