டெல்லி: டிராலியில் 2215 தோட்டாக்கள்! சுதந்திர தினத்தை சீர்குலைக்க திட்டமா? 6 பேரிடம் தீவிர விசாரணை
டெல்லி: இந்தியாவில் சுதந்திர தினத்தையாட்டி தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டெல்லியில் டிராலி பேக்குகளில் இருந்த 2,215 தோட்டாக்களுடன் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தீவிரவாதிகள் மூலம் சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதித்திட்டம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியான வரும் திங்கட்கிழமை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்டத்தில் அனைவரும் சிறை செல்லவில்லை.. சிலர் ஒதுங்கினர்! ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் பேச்சு
டிராலி பேக்கில் இருந்த தோட்டாக்கள்
இந்நிலையில் கிழக்கு டெல்லியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது டிராலி பேக்குடன் சந்தேகப்படும் படியாக நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த டிராலி பேக்கை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதன் உள்ளே துப்பாக்கி தோட்டாக்கள் அதிகளவில் இருந்தன.
6 பேர் கைது
இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 4 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் அஜ்மல், ரஷீத், பரிக்சித், சதாம், கம்ரான் மற்றும் நசீர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 2,251 க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எந்த பகுதியை சேர்ந்தவர்கள்?
இதில் அஜ்மல், ரஷீத் ஆகியோர் உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூரை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் ஆகஸ்ட் 6ல் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து சட்டவிரோதமாக துப்பாக்கி தோட்டாக்களை வாங்கி கொண்டு லக்னோவில் உள்ள ஒருவரிடம் வழங்க சென்றபோது போலீசாரிடம் சிக்கி கொண்டதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் இதற்கு முன்பும் இத்தகைய தோட்டா கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுது்து லக்னோ மற்றும் ஜான்பூர் பகுதிகளில் போலீசார் சென்று அதிரடி சோதனை நடத்தி தோட்டா ரீசிவரான சதாமை கைது செய்தனர். மேலும் டெல்லியில் இன்னொரு இடத்தில் போலீஸ் கண்காணிப்பில் டேராடூனில் இருந்து தோட்டா கொண்டு வந்த பரிக்சித் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு மற்ற இருவரும் சிக்கினர்.
தீவிரவாத பின்னணியா? தீவிர விசாரணை
சுதந்திர தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் எனக்கூறி உளவுத்துறை சார்பில் பாதுகாப்பு, கண்காணிப்பை அதிகரிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டெல்லியில் தோட்டாக்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‛‛இவர்கள் அனைவரும் சட்டவிரோத தோட்டா கடத்தலில் தொடர்பு கொண்டுள்ளனர். இருப்பினும் தீவிரவாத பின்னணி உள்ளதா? இல்லையா?, சுதந்திர தினத்தை சீர்க்குலைக்க முயன்றனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.