2 துண்டான காது.. ஆக்ரோஷமாக 6 வயது சிறுவனை தாக்கிய பிட்புல் நாய்.. துடிதுடித்த சிறுவன்
டெல்லி: வீட்டுக்கு வெளியே விழுந்த பந்தை எடுக்க சென்ற 6 வயது சிறுவனை பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் பிட்புல் நாய் விரட்டி விரட்டி கடித்தது. மொத்தம் 10 இடங்களில் பிட்புல் நாய் கடித்த நிலையில் சிறுவனின் காது கிழிந்து துண்டானது. தற்போது அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். பிட்புல் நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி பிரேம் நகரில் வசித்து வருபவர் ராஜேஷ் பால். இவர் பிட்புல் நாய் வளர்த்து வருகிறார். இவரது வீட்டு அருகே 6 வயது சிறுவன் வசித்து வருகிறான். நேற்று முன்தினம் சிறுவன் தனது வீட்டு வளாகத்தில் தனது தாத்தாவுடன் பந்தை வைத்து விளையாடி வந்தான்.

அப்போது திடீரென்று அந்த பந்து வீட்டுக்கு வெளியே வந்து விழுந்தது. இதையடுத்து பந்தை எடுக்க சிறுவன் வீட்டுக்கு வெளியே வந்தான். அப்போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பிட்புல் நாய் வெளியே ஓடிவந்தது.
சிறுவன் மது பாய்ந்த பிட்புல் நாய் கடித்தது. பயந்துபோன சிறுவன் பிட்புல் நாயிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினான். ஆனால் பிட்புல் நாய் விடவில்லை. சிறுவனை விரட்டி விரட்டி கடித்தது. இதையடுத்து அங்கிருந்த ஒரு பெண் உள்பட 2 பேர் சிறுவனை பிட்புல் நாயிடம் இருந்து மீட்டனர். அதன்பிறகு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பிட்புல் நாய் தாக்குதலின் சிறுவனின் காது கிழிந்தது. காதின் ஒருபகுதி துண்டாகிப்போனது. உடலில் மொத்தம் 10 இடங்களில் நாய் கடித்துள்ளது. குறிப்பாக தலையின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சிறுவனின் தாத்தா கூறுகையில், ‛‛நாய் கடித்ததில் எனது பேரனின் பற்கள் உடைந்துள்ளன. முகம் மோசமாக காயமடைந்துள்ளது. காது கழிந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அவன் சுயநினைவுடன் இருக்கிறான். பேச முடிகிறது. இந்த நாய் இதற்கு முன்பு 4 குழந்தைகளை தாக்கியது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளோம். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது எனது பேரனை தாக்கி உள்ளது.'' என்று கூறி வருந்தினார்.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 291 (விலங்குகள் விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொள்வது), 125(b) (மற்றவர்களின் உயிருக்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் செயலில் ஈடுபடுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிட்புல் நாய் உரிமையாளர் ராஜேஷ் பாலை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பிட்புல் நாயை காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுவனை பிட்புல் நாய் தாக்குவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications