நமக்கெல்லாம் நடக்கவே நாக்கு தள்ளுது.. இந்த தாத்தா 62வது பிறந்தநாளுக்கு 62.4 கிமீ ஓடி இருக்காரு!
தனது 62வது பிறந்தநாளை கொண்டாட 62.4 கிலோ மீட்டர் தூரம் ஓடி சாதனை படைத்திருக்கிறார் முதியவர் ஒருவர்.
டெல்லி: தனது 62வது பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாட 62.4 கிலோ மீட்டர் தூரம் ஓடிய முதியவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
''காயமே இது மெய்யடா, இதில் கண்ணும் கருத்தும் வையடா, நோயில்லாமல் காத்து நுாறாண்டுகள் உய்யடா'' என பாடினார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நம் முன்னோர்கள் நமக்கும் போதித்த அருமையான அறிவுரை.
ஆனால் இயற்கையில் இருந்து பெரிதும் விலகி சென்றுவிட்ட நாம், தவறான வாழ்வியல் முறைகளால் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். உடல் உழைப்பில்லாமல், உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல் வேலை பார்ப்பதால் உடல் எடை கூடி, நான்கு அடி நடக்கக் கூட சிரமப்படுகிறோம்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இப்படிப்பட்ட இன்றைய காலகட்டத்தில் தனது 62வது பிறந்தநாளை கொண்டாட 62.4 கிலோ மீட்டர் தூரம் ஓடி சாதனை படைத்திருக்கிறார் முதியவர் ஒருவர். ஆச்சர்யத்துடன் அவரை கொண்டாடி வருகின்றன சமூகவலைதளங்கள்.

ஜஸ்ட் 62 வயது தான்
ஜஸ்மர் சிங் சந்து எனும் அந்த 62 வயது இளைஞர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தான் ஓடும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, "எனது 62வது பிறந்தநாளையொட்டி, 62.4 கிலோ மீட்டர் தூரம் ஓடினேன்", என குறிப்பிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியக் கடலில் மூழ்கி, சந்துவை பாராட்டி தள்ளி வருகின்றனர்.

பாராட்டு
62.4 கிலோ மீட்டர் தூரத்தை ஏழரை மணி நேரத்தில் ஓடி கடந்திருக்கிறார் சந்து. இந்த வயதில் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கும் சந்துவை கண்டு இளைஞர்களே பொறாமைப்படுகின்றனர். சந்துவை பார்க்கும் போது தங்களுக்கு உத்வேகம் ஏற்படுவதாக அவர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

நடங்க பாஸ்
உடல் ஆரோக்கியம் என்பது வயதை பொருத்தது இல்லை, அது நம் வாழும் முறையில் தான் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார் ஜஸ்மர் சிங் சந்து. அவரது வழியில் நாமும் உடல் ஆரோக்கியத்தை பேணுவோம். பிறந்தநாளுக்குத்தான் ஓட வேண்டும் என்றில்லை, தினமும் குறிப்பிட்ட நேரம் நடைபயிற்சி மேற்கொண்டாலே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். முடிந்தளவு அதையாவது பின்பற்றுவோம்.












Click it and Unblock the Notifications