70 வயதுக்கு மேலான முதியவர்களுக்கு இலவச சிகிச்சை.. ஆயுஷ்மான் திட்டம் பற்றி ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு
டெல்லி: மத்திய அரசின் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தின் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திரெளபதி முர்மு கூறினார். இதனால் முதியவர்களுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்க உள்ளது.
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் எம்பிக்களாக பதவியேற்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வென்ற 40 எம்பிக்களும் கடந்த 25 ம் தேதி எம்பிக்காக பதவியேற்றனர். இதையடுத்து நேற்று லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடந்தது.

இதில் குரல் வாக்கெடுப்பு மூலம் பாஜக கூட்டணி வேட்பாளரான ஓம்பிர்லா வெற்றி பெற்றார். அவர் ‛இந்தியா' கூட்டணி வேட்பாளரான கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சுரேசை வீழ்த்தி மீண்டும் சபநாயகராக பொறுப்பேற்றார்.
இதையடுத்து இன்று லோக்சபாவுடன் சேர்ந்து ராஜ்யசபா கூட்டமும் தொடங்கியது. பொதுவாக ஆண்டின் முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். அதன்படி இன்று லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்களின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார். இந்த வேளையில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகளை அவர் பட்டியலிட்டு உரையாற்றி வந்தார். மேலும் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள திட்டங்கள் பற்றிய முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். ஜனாதிபதி திரெளபதி முர்மு கூறியதாவது:
‛‛எனது அரசு இன்னொரு முடிவை எடுக்கப்போகிறது. 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையின் பலன் கிடைக்க செய்யப்பட உள்ளது'' என்றார். ஆயுஷ்மான் திட்டம் என்பது மத்திய அரசின் இலவச காப்பீடு திட்டமாகும். இந்த திட்டம் என்பது கடந்த 2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் என்பது 2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார கணக்கெடுப்பின் கீழ் வறுமையில் உள்ளவர்களுக்கானது.
இந்த திட்டத்தில் இணைந்து கொண்ட குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும். அதாவது ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் திட்ட பயனாளிகள் மருத்துவ பரிசோதனை, மருத்துவ சிகிச்சைகள் பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது. அதன்படி தற்போது ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த அறிவிப்பை தனது உரையின் மூலம் வெளியிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது உரையில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். அப்போது, ‛‛எதிர்ப்பு, குறுகிய மனப்பான்மை, சுயநலம் உள்ளிட்டவை ஜனநாயகத்தின் அடிப்படை பண்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்தின் வளர்ச்சி பாதைக்கான விவாதத்தை தடுக்கின்றனர். ஒவ்வொரு சட்ட சீர்த்தங்களும் நாட்டின் நன்மைக்காக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீர்த்தருங்கள் அனைத்தும் நாட்டின் தேவையாக இருந்துள்ளன. ஜிஎஸ்டி வரி வசூல் இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்த உதவுகிறது. அதோடு ஏப்ரல் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இது மாநிலங்களுக்கான லாபத்தை அதிகரித்துள்ளது.
எனது அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. வெளிநாட்டு அகதிகளுக்கு நம் நாட்டில் குடியுரிமை வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமலில் உள்ளது. மேலும் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மாறாமல் நல்ல எதிர்காலத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications