அழுகிய நிலையில்.. கங்கையில் கரை ஒதுங்கிய 71 உடல்கள்.. பீகார், உ.பியில் பதற்றம்.. என்ன நடக்கிறது?
டெல்லி: இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், பீகார், உத்தர பிரதேசத்தில் கங்கை நதியில் இதுவரை 71 பிணங்கள் மீட்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா நோயாளிகளின் பிணங்கள் இது என்று புகார் வைக்கப்படுவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Recommended Video
2014 லோக்சபா தேர்தலை சந்தித்த போது பாஜக வைத்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று, கங்கை நதியை சுத்தம் செய்வது. பாஜகவிற்கு உத்தர பிரதேசத்தில் மிகப்பெரிய பலமாக இந்த வாக்குறுதி பார்க்கப்பட்டது.
தற்போது அதே பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்திலும், பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் பீகாரில் 71 பிணங்கள் கங்கை நதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த உடல்கள் எல்லாம் கொரோனா நோயாளிகளுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேகம்
பீகார், உத்தர பிரதேச கங்கை எல்லையில் இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. முக்கியமாக இரண்டு மாநிலங்களின் எல்லையான புக்ஸர் பாலத்தில் கீழ் இந்த உடல்கள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பீகாரின் குற்றச்சாட்டின்படி உத்தர பிரதேச ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எல்லையில் இருக்கும் பல்லியா கிராமத்தில் உள்ள கங்கை நதி கரையில் உடல்களை வீசுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பீகார்
ஆனால் உத்தர பிரதேசத்தின் குற்றச்சாட்டின்படி பீகார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சரன் என்ற எல்லையோர கிராமத்தில், உள்ள கங்கை நதி கரையில் இந்த உடல்களை வீசுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் எல்லையோர கிராமத்தில் உள்ள மக்களோ, இரண்டு மாநில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் புக்ஸர் பாலத்தில் வந்து உடல்களை வீசி செல்வதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.

நிரூபிக்கப்படவில்லை
இந்த உடல்கள் கொரோனா நோயாளிகளின் உடல்களாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை வீசப்பட்ட உடல்களில் பீகார் கங்கை நதியில் 71 உடல்கள் கரை ஒதுங்கி உள்ளன. இந்த உடல்களை பாலத்தில் இருந்து தண்ணீரில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் வீசும் வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இரண்டு மாநிலங்களுக்கு இடையில் இது மோதலை ஏற்படுத்தி உள்ளது.

அழுகிய
அழுகிய நிலையில் இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள் கொரோனா பாதிக்கப்பட்டவையா என்பதை கண்டுபிடிக்க, பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த 71 பேரின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதேபோல் உடல்களை அடையாளம் காண வேண்டும் என்று டிஎன்ஏ எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

மோசம்
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த உடல்கள் 5-6 நாட்கள் பழைய உடல்கள். இதனால் எங்கோ இந்த உடல்களை பதுக்கி வைத்துவிட்டு, பின் இரவோடு இரவாக வந்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் இப்படி உடல்களை வீசிவிட்டு செல்வதாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. புனித நதியாக கருதப்படும் கங்கை நடக்கும் இந்த அவலம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications