உருமாறிய கொரோனா வகைகள்.. இந்தியாவில் திடீர் அதிகரிப்பு... மாநில அரசுகள் தீவிர ஆலோசனை
டெல்லி: இந்தியாவில் இதுவரை 795 பேருக்குப் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது வரை 795 பேருக்குப் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடைசி இரண்டு வாரத்தில் மட்டும் 158 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி பிரிட்டன் நாட்டிலிருந்து திரும்பிய ஆறு பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்புபவர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா என இந்த மூன்று கொரோனா வகைகளும் மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவும் என்று சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி சவுபே தெரிவித்திருந்தார். மேலும், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் இந்த உருமாறிய வகைகள் மீண்டும் பாதிக்கும் திறனைக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்தியாவில் இப்போதுவரை அதுபோன்ற பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 40,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 1.16 கோடியை கடந்துள்ளது. அதேபோல நேற்று 199 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்பு 1.60 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது.