தித்திக்க போகுது தீபாவளி! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்
டெல்லி: தீபாவளி நெருங்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மெகா இன்ப பரிசு கிடைக்கப் போகிறது. அதாவது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுக்க உள்ள மத்திய அரசு ஊழியர்கள், பென்சன்தாரர்கள் எனப் பல கோடி பேர் பயனடைவார்கள்.
நமது நாட்டில் நவ. 1ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சில வாரங்களே தீபாவளிக்கு உள்ளதால் பொதுமக்கள் அதற்கான ஷாப்பிங்கை தொடங்கிவிட்டனர்.

அகவிலைப்படி உயர்வு: இதற்கிடையே மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஒரு மெகா தீபாவளி பரிசு கிடைக்கப் போகிறது. அதாவது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு முன்னதாகவே இந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
அறிவிப்பு எப்போது: கடந்த அக்.9ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் தீபாவளி நெருங்கும் வேளையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு அமைச்சரவை கூட்டம் நடக்கும் என்றும் அதைத் தொடர்ந்து அகிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
முன்பே குறிப்பிட்டது போல மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்கள் 50 சதவீத தொகையை அகவிலைப்படியாகப் பெறுகிறார்கள். இப்போது அது 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டால் அகவிலைப்படி 53 சதவீதமாக உயரும்.
அகவிலைப்படி எதற்கு: அகவிலைப்படி என்பது ஒரு அரசு ஊழியரின் சம்பளத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.. பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், அதைச் சமாளிக்க அகவிலைப்படி தான் உதவும். இது சில்லறை விலை ஏற்றத்தைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது. அகவிலைப்படி என்பது ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு முறை திருத்தப்படும்.
தீபாவளியை ஓட்டி வரும் அகவிலைப்படி அறிவிப்பு தொடர்ந்து ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவைத் தொகையையும் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பல கோடி மத்திய அரசு ஊழியர்களும் பென்சன்தாரர்களும் பயன் பெறுவார்கள்.
சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்: 7வது ஊதியக் குழுவின் படி, லெவல்-1ல் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18000 முதல் அதிகபட்சமாக ரூ.56900 வரை இருக்கும். நாம் குறைந்தபட்ச சம்பளம் பெறும் ஒருவரின் சம்பளத்தை எடுத்துக் கொண்டால் ரூ.18,000இல் 53% அதாவது மாதம் ரூ 9540 கிடைக்கும். இதற்கு முன்பு அகவிலைப்படி 50% தரப்பட்டது. அதாவது மாதம் ரூ 9000 கிடைத்து வந்தது. புதிய முறையின் அடிப்படையில் கூடுதலாக ஒவ்வொரு மாதமும் ரூ. 540 கிடைக்கும். அதாவது ஆறு மாதங்களில் ரூ 3240 கிடைக்கும்.
இதே கணக்கின்படி பார்த்தால் அதிகபட்ச சம்பளம் (ரூ 56,900) வாங்கும் ஊழியருக்கு ஒவ்வொரு மாதமும் கூடுதலாக ரூ 1707 கிடைக்கும். அதாவது ஆறு மாதங்களுக்கு ரூ.10,242 கிடைக்கும். அதேநேரம் இது பொதுவான கணக்கு மட்டுமே.. ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்கள் வாங்கும் சம்பளத்தைப் பொருத்து இது மாறும்.












Click it and Unblock the Notifications