குறையும் கொரோனா.. ஒரு நாளில் 8,635 பேருக்கு மட்டுமே பாதிப்பு... எட்டு மாதங்களில் இதுதான் குறைவு
டெல்லி: இந்தியாவில் கடந்த எட்டு மாதங்களிலேயே மிகக் குறைவாக 8,635 பேருக்கு மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தடுப்பூசி வழங்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. உலகின் மற்ற அனைத்து நாடுகளையும் விட இந்தியாவிலேயே தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெறுவதாகப் பிரதமர் மோடி தனது மன் கீ பாத் உரையில் தெரிவித்தித்திருந்தார்.

கொரோனா பாதிப்பு குறைவு
இந்தியாவில் முதலில் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி, வூஹான் நகரிலிருந்து திரும்பிய மாணவருக்குக் கேரளாவில் இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. செப்டம்பர் மாதம் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு அதன் பின் மெல்லக் குறையத் தொடங்கியது. கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி 8.171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு நேற்றுதான், கொரோனா பாதிப்பு 8,635ஆக குறைந்தது.

கொரோனா உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 1.04 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல 1.54 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 94 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த மே மாதத்திற்குப் பின் உயிரிழப்பு இவ்வளவு குறைவது இதுவே முதல்முறை. முதலில் கொரோனா உயிரிழப்பால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த தலைநகர் டெல்லி, தற்போது மெல்ல மீண்டு வருகிறது.

இரு மாநிலங்களில் பாதிப்பு அதிகம்
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வரும்போதும் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் கொரோனா பரவல் திடீரென்று அதிகரித்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வருபவர்களில் 70% பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் இரண்டு உயர் மட்ட குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சுகாதார துறைக்கு ஒதுக்கப்படும் நிதி
இந்தியா தனது பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான செலவுகளைக் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியுள்ளது. 2021-2022 நிதியாண்டில் சுகாதாரத் துறைக்கு 2.23 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிட 137 சதவீதம் அதிகமாகும். குறிப்பாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications