5 மாதங்கள்... 8 நாடுகளின் சுகாதார துறை அமைச்சர்கள் பதவிக்கு ஆப்பு வைத்த கொரோனா!
டெல்லி: உலக நாடுகளில் பல லட்சம் மக்களை பலி கொண்ட கொரோனா வைரஸ் 2021-ம் ஆண்டில் இதுவரை 8 நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சர்களின் பதவிக்கும் ஆப்பு வைத்திருக்கிறது.
கடந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்று உலகத்தையே முடக்கிப் போட்டது. இந்த கொரோனா தொற்றை சரியாக கையாளததால் சில நாடுகளில் ஆளும் அரசுகளுக்கு எதிராக எதிர்ப்பு எழுந்தது.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
இதனால் நியூசிலாந்து, பிரேசில், செக் குடியரசு ஆகியவற்றில் அந்நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் பதவி விலக நேரிட்டது. தற்போதைய 2021-ம் ஆண்டின் முதல் 5 மாதங்களிலேயே 8 நாடுகளின் சுகாதார துறை அமைச்சர்கள் பதவியை காவு வாங்கிவிட்டது கொரோனா.
மங்கோலியா, அர்ஜென்டினா
மங்கோலியாவில் கொரோனா சிகிச்சை தொடர்பாக சர்ச்சை வெடித்தது. இதனால் மங்கோலியா பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அர்ஜென்டினாவில் பிப்ரவரி மாதம் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நிகழந்ததாக சர்ச்சைகள் வெடித்தன. இதனால் சுகாதார அமைச்சர் Gines Gonzalez Garcia ராஜினாமா செய்தார்.
பெரு, ஈகுவடார்
பெரு நாட்டில் கடந்த பிப்ரவரியில் கொரோனா தடுப்பூசி ஊழல் பெரும் விவகாரமாக வெடித்தது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு முன்னரே மாஜி அதிபருக்கு தடுப்பூசி போட்டதும் சர்ச்சையானது. இதனால் சுகாதார அமைச்சர் Dr Pilar Mazzetti பதவிக்கு வேட்டு வைக்கப்பட்டது. ஈகுவடார் நாட்டின் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் கடந்த மார்ச் இறுதியில் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Rodolfo Farfan பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. இத்தனைக்கும் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் Juan Carlos Zevallos பதவி விலகியதால் புதியதாக நியமிக்கப்பட்டவர் Rodolfo Farfan. பதவி வகித்த ஒரு மாதத்திலேயே அதனை பறிகொடுத்தார்.
ஸ்லோவேகியா, ஜோர்டான்
ஸ்லோவேகியா நாட்டில் கொரோனா தொற்றை கையாளுவதில் அரசு சரியாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு வெடித்தது. இதனையடுத்து சுகாதார அமைச்சர் Marek Krají பதவி விலகினார். ஜோர்டானில் மார்ச் மாதத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்தனர். இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் கேட்டுக் கொண்டதால் சுகாதார அமைச்சர் Nazir Obeidat ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
ஆஸ்திரியா, ஈராக்
ஆஸ்திரியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் Rudolf Anschober கடந்த ஏப்ரல் 13-ந் தேதி பதவி விலகினார். கொரோனா பணிகள் தொடர்பான விமர்சனங்களை முன்வைத்து அவர் ராஜினாமா செய்தார். ஈராக்கில் மருத்துவமனை தீ விபத்து ஒன்றில் கடந்த மாதம் 80 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் Hassan al-Tamimi பதவி விலகினார்.