வாடிக்கையாளருக்கு இன்ப அதிர்ச்சி.. தவறுதலாக வந்த ரூ.820 கோடி.. அடுத்து வங்கிக்கே நடந்த ட்விஸ்ட்
டெல்லி: டெல்லி யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.820 கோடி விழுந்துள்ளது. இதுவரை ரூ.649 கோடி மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பணத்தை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் சென்னையில் மெர்க்கண்டைல் வங்கியின் 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது சர்ச்சையானது. அதில் 30000 ரூபாய் தவிர மற்ற பணத்தை வங்கி மீட்டது. அப்போது பெரும் சர்ச்சையானது. அதேபோல் தஞ்சாவூரில் ஒருவருக்கு பல கோடி ரூபாய் பணம் வந்ததாக எஸ்எம்எஸ் மட்டும் வந்தது. ஆனால் பணம் வரவில்லை. இதேபோல் தவறுதலாக சில வங்கிகள் பணத்தை வேறு ஒருவருக்கு வரவு வைத்து சிக்கலில் சிக்கின.

இப்படி சமீபகாலமாக, வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய், தவறுதலாக வரவு வைக்கப்படுவது நடந்த நிலையில், கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட பொதுத்துறை வங்கியான யூகோ வங்கியின் வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.820 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நவம்பர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வேறு சில வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஐ.எம்.பி.எஸ். மின்னணு பணபரிமாற்ற சேவை மூலம் பரிமாற்றம் மேற்கொண்டபோது, அந்த பணம் தவறுதலாக யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் சிலரது கணக்குகளில் வந்து சேர்ந்ததாக கூறப்பபடுகிறது. ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்து உண்மையில் பணம் கழிக்கப்பட வேண்டும். ஆனால் பணம் கழிக்கப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்படி ஒரு தவறு நடந்திருப்பதை யூகோ வங்கி உடனடியாக கண்டுபிடித்தது. தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கியது.
தொடர்ந்து அந்த பணத்தை மீட்கும் முயற்சியில் யூகோ வங்கி ஈடுபட்டது. இதுவரை ரூ.649 கோடியை அந்த வங்கி மீட்டுள்ளது. இது, மொத்த பணத்தில் 79 சதவீதம் ஆகும். மீதி ரூ.171 கோடியை மீட்கும் முயற்சி நடந்து வருவதாக யூகோ வங்கி கூறியுள்ளது. இது மனித தவறால் நடந்ததா அல்லது இணைய குற்றவாளிகளின் நடவடிக்கையா என்பது பற்றி வங்கி எதுவும் தெரிவிக்கவில்லை. விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.












Click it and Unblock the Notifications