ரூ.20,000 வாங்கியவர்கள் சம்பளம் இனி 57,200.. தயாராகும் 8வது ஊதியக் குழு! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
டெல்லி: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடைமுறையில் உள்ள 7வது ஊதியக்குழு 2016ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஊதியக்குழுவின் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டுடன் நிறைவடைய உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியதாரர்களுக்கான படிகளை மாற்றி அமைக்க 8வது ஊதியக்குழு அமைக்க ஒப்புதல் வழங்கி உள்ளது.
தற்போது 8வது ஊதியக் குழு நியமனம் தொடங்கி இருக்கின்றன. ஊதியக்குழுவில் ஆலோசகர்கள் உட்பட 42 காலியிடங்கள் மற்றும் தலைவர் பொறுப்பினை நிரப்புவதற்கான செயல்பாடுகளை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இந்த மாத இறுதியில் முறையான நியமனங்கள் செய்யப்பட்டு அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஊதியக்குழுவின் மிக முக்கியமான ஃபிட்மண்ட் ஃபேக்டர் எனப்படும் தகுதி காரணி முக்கியமான ஒன்றாகும். 7வது ஊதியக்குழு நடைமுறையின் போது ஃபிட்மண்ட் ஃபேக்டர் 2.57 சதவிகிதமாக இருந்தது. அதாவது ஒரு ஊழியர் ரூ.10 ஆயிரம் ஊதியமாக பெற்றிருந்தால், 2.57 ஃபிட்மண்ட் ஃபேக்டரின் படி, அவரின் சம்பளம் ரூ.25,700 ஆக உயர்ந்திருக்கும்.
தற்போது 8வது ஊதியக்குழுவின் ஃபிட்மண்ட் ஃபேக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும் என்று பார்க்கலாம். ஒருவேளை அப்படி நிர்ணயம் செய்யப்பட்டால், அடிப்படை ஊதியமாக ரூ.20,000 பெற்று வந்தால், அவரின் ஊதியம் ரூ.57,200 ஆக உயரும். அதேபோல் அடிப்படை ஊதியம் ரூ.30 ஆயிரமாக இருந்தால், அவரின் ஊழியம் ரூ. 85,800ஆக உயரும்.
ரூ.40 ஆயிரம் அடிப்படை ஊதியமாக இருந்தால், அவரின் ஊதியம் ரூ.1,14,400 ஆக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஃபிட்மண்ட் ஃபேக்டர் அடிப்படை ஊதியத்தில் மட்டுமல்லாமல், அகவிலைப்படி கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications