Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

8வது ஊதியக் குழு பரிந்துரை அமலானதும், மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் ரூ. 14,000 முதல் ரூ. 19,000 வரை உயர்வு இருக்கலாம் என்று கோல்ட்மேன் சாச்ஸ் (Goldman Sachs Report) தெரிவித்துள்ளது. இது அவர்களின் தற்போதைய மாத சராசரி சம்பளமான ரூ. 1 லட்சத்தில் கணக்கிட்டால் (வரிக்கு முன்) 14-19% உயர்வாகும்.

இன்று வெளியான, நிதிச் சேவை நிறுவனமான, கோல்ட்மேன் சாச்ஸ் அறிக்கையில், 8வது ஊதியக் குழு (8th Pay Commission) ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்படலாம் என்றும், அதன் அறிக்கை 2026 அல்லது 2027 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படலாம் என்றும் கூறியுள்ளது. ஊழியர்கள் மாதத்திற்கு கூடுதலாக ரூ. 14,000 முதல் ரூ. 19,000 வரை பயனடையலாம்.

8th Pay Commission Central Government Employees Salary Hike

ஊதிய உயர்வின் மூன்று சாத்தியக்கூறுகளை அந்த நிதிச் சேவை நிறுவனம் முன்வைத்துள்ளது:

சாத்தியக்கூறு 1: 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ரூ. 1.75 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்து, அதில் 50% ஊதிய உயர்வுக்கும் 50% ஓய்வூதிய உயர்வுக்கும் பயன்படுத்தினால், மத்திய அரசு ஊழியர்களின் சராசரி சம்பளம் மாதத்திற்கு ரூ. 14,600 உயரும்.

சாத்தியக்கூறு 2: ஒதுக்கீடு ரூ. 2 லட்சம் கோடியாக இருந்தால், சராசரி சம்பளம் மாதத்திற்கு ரூ. 16,700 அதிகரிக்கும்.

சாத்தியக்கூறு 3: மத்திய அரசு ரூ. 2.25 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்தால், ஊழியர்களின் சம்பள உயர்வு மாதத்திற்கு ரூ. 18,800 ஆக இருக்கும்.

தற்போது, மத்திய அரசு ஊழியர்களின் சராசரி சம்பளம் ரூ. 1 லட்சம் (வரிக்கு முன்) என்று கோல்ட்மேன் சாச்ஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பள உயர்வு 50 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கும், 65 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும்.

7வது ஊதியக் குழுவில், சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகளுக்காக மத்திய அரசு சுமார் ரூ. 1.02 லட்சம் கோடி செலவழித்தது குறிப்பிடத்தக்கது.

8வது ஊதியக் குழு இதுவரை

8வது ஊதியக் குழு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஜனவரி 16, அன்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இருப்பினும், அதன் உறுப்பினர்கள், தலைவர் மற்றும் பணி வரம்புகள் (ToR) இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவை முடிவு செய்யப்பட்டவுடன், ஆணையம் பங்குதாரர்களுடன் கலந்துரையாடி, ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகளுக்கான பொருத்துதல் காரணிகள் (Fitment Factor) மற்றும் பிற வழிமுறைகளை தீர்மானிக்கும்.

கோல்ட்மேன் சாச்ஸின் கணிப்புப்படி, 8வது ஊதியக் குழு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட வாய்ப்புள்ளது, மேலும் அதன் அறிக்கை 2026 அல்லது 2027 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படலாம்.

தேசிய கவுன்சில்-கூட்டு ஆலோசனை குழு குறைந்தபட்சம் 2.57 (7வது ஊதியக் குழுவைப் போன்றது) அல்லது அதற்கு மேற்பட்ட பொருத்துதல் காரணியை எதிர்பார்க்கிறது. கூட்டு ஆலோசனை குழு என்பது மத்திய அரசுக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான ஒரு அமைப்பாகும்.

"பொருத்துதல் காரணி குறைந்தது 2.57 ஆகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும் என்று நான் இன்னும் நம்புகிறேன்," என்று தேசிய கவுன்சில்-கூட்டு ஆலோசனை குழு செயலாளர் (ஊழியர் தரப்பு) சிவ கோபால் மிஸ்ரா சமீபத்தில் என்டிடிவி ஊடகத்திடம் தெரிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் ?

2.57 என்ற பொருத்துதல் காரணி மத்திய அரசு ஊழியர்களுக்கு 157 சதவீத ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும். இதன் பொருள் தற்போதைய குறைந்தபட்ச சம்பளமான மாதம் ரூ. 18,000 என்பது ரூ. 46,260 ஆக அதிகரிக்கும். குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ. 9,000 லிருந்து ரூ. 23,130 ஆக உயரும். 7வது ஊதியக் குழு 2.57 பொருத்துதல் காரணியை பரிந்துரைத்தது. இது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ. 7,000 லிருந்து ரூ. 18,000 ஆக 157 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+