மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்.. 5 வயது குழந்தையை கங்கையில் மூழ்கடித்து கொன்ற பெற்றோர்! அடுத்து பகீர்
டெல்லி: மூடநம்பிக்கையில் 5 வயதுக் குழந்தையை அவரது பெற்றோரே கங்கை நதியில் மூழ்கடித்து கொலை செய்த பகீர் சம்பவம் உத்தரகண்ட்டில் நடந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மூடநம்பிக்கையால் ஐந்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். அந்த சிறுவனுக்கு ரத்த புற்றுநோய் இருந்துள்ளது.

கங்கை நதி ரத்த புற்று நோயைக் குணப்படுத்தும் என்று யாரோ சொன்னதை நம்பி, அச்சிறுவனின் பெற்றோர் அவனைக் கங்கை நதிக்கரைக்கு அழைத்து வந்துள்ளனர். வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவும் நிலையில், அதையும் தாண்டி சிறுவனைக் கங்கை ஆற்றில் மூழ்க வைத்துள்ளனர்.
புற்று நோய்: டெல்லியில் வசித்து வந்த அந்த சிறுவனின் குடும்பத்தினர், நேற்று காலை 9 மணியளவில் ஹரித்வாருக்கு கிளம்பியுள்ளனர். குழந்தையுடன் அவரது பெற்றோர் மற்றும் மற்றொரு உறவினர் பெண் உடன் வந்துள்ளார். அந்த பெண் உயிரிழந்த சிறுவனின் அத்தை என்று கூறப்படுகிறது. சிறுவனின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததாக அவர்களை அழைத்து வந்த டாக்ஸி டிரைவர் தெரிவித்தார்.
அப்போது தான் அவரது குடும்பத்தினரே சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். டெல்லியில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்களும் சிறுவனைக் கைவிட்டதாக டாக்ஸி டிரைவரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்தை செய்த காரியம்: இந்தச் சம்பவம் தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்றும் பரவி வருகிறது. அதில். சிறுவனின் அத்தை சிறுவனைத் தண்ணீருக்கு அடியில் மூழ்கடிக்கிறார். அருகே இருக்கும் சிறுவனின் பெற்றோர் ஏதோ மந்திரங்களை உச்சரிக்கிறார்கள். சில நிமிடங்கள் வரை அப்படி தண்ணீருக்கு அடியில் மூழ்கடித்தால் சிறுவனின் ரத்த புற்றுநோய் சரியாகும் என்பது அவர்கள் நம்பிக்கை. பொதுவாகவே இதுபோல அங்கு நடப்பது வழக்கம் என்பதால் முதலில் அங்கிருந்தவர்கள் யாரும் இது குறித்துக் கேட்கவில்லை.
ஆனால், அங்கிருந்த சிலர் சிறுவன் தண்ணீருக்கு அடியில் நீண்ட நேரம் இருப்பதைக் கவனித்து, சிறுவனை உடனடியாக தூக்கும்படி கூறியுள்ளனர். இருப்பினும், பெற்றோர் அதைக் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அருகே இருந்தவர்கள் வலுக்கட்டாயமாகச் சிறுவனை வெளியே கொண்டு வந்தனர். அப்போது அச்சிறுவனின் அத்தை ஆக்ரோஷமாகத் தடுக்க வந்தவர்களுடன் சண்டையிடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சிறுவனை மீட்ட போது சிறுவன் மயக்க நிலையில் இருந்துள்ளார்.
உயிரிழப்பு: இதையடுத்து உடனடியாக அந்த 5 வயதுக் குழந்தையை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அப்போதும் மூட நம்பிக்கையை விடாத அந்த சிறுவனின் அத்தை, சிறுவன் நிச்சயம் உயிர் பிழைப்பான் என்று சொல்லி சடலத்திற்கு அருகே பிரார்த்தனை செய்துள்ளார். இந்த வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.
போலீசார் தகவல்: இது குறித்து ஹரித்வார் போலீசார் கூறுகையில், "சிறுவனுக்குப் புற்று நோய் இருந்த நிலையில், அவர் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும், ஒரு கட்டத்தில் அந்த குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதன் பின்னரே கங்கை நதி தங்கள் குழந்தையைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்து இப்படிச் செய்துள்ளனர்.
நாங்கள் அந்த மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற முயல்கிறோம். ஆனால், தற்போது வரை அவர்கள் சொல்வது உண்மை போலவே தெரிகிறது" என்றார். மேலும், அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அவரது அத்தையை இப்போது கைது செய்துள்ள போலீசார், அவர்களை விசாரணைக்கு எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications