மோடி சொன்ன “ஒற்றை” வார்த்தை... ஆர்பிஐ கவர்னர் பதவியை தூக்கி எறிந்த உர்ஜித் பட்டேல்- ’பரபர’ புத்தகம்!
டெல்லி: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தமது பதவியை ராஜினாமா செய்ததன் காரணமே பிரதமர் மோடி சொன்ன மிக முக்கியமான விமர்சனம்தான் என குற்றம்சாட்டியிருக்கிறது முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் எழுதிய புத்தகம்.
நாட்டின் முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், 'We Also Make Policy என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இடையேயான மோதல் குறித்த வெளிவராத பல அதிர்ச்சி தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

சுபாஷ் சந்திர கார்க் எழுதிய 'We Also Make Policy' புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கருத்துகளின் சாராம்சம்: 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்புக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. அந்த கால கட்டத்தில் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் என்ன விவகாரங்கள் பேசப்பட்டன? யார் யார் மீது என்னென்ன விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன என்பவை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல், அப்போது நிதி அமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜேட்லி உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஒருமுறை 2 மணிநேரம் தீவிரமாக ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பேசிய உர்ஜித் பட்டேல், நாங்கள் செய்ய எதுவுமே இல்லை; அரசாங்கம்தான் அத்தனை முடிவுகளையும் எடுக்க வேண்டும்; எங்களது பணி என்னவோ அதைத்தான் எங்களாள் செயய முடியும் என முகத்தில் அறைந்தது போல கூறினாராம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உருப்படியான ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்பதால் பிரதமர் மோடி மிகவும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தாராம்.
அத்துடன் நிற்காமல், உர்ஜித் பட்டேலின் இந்தப் போக்கை கடும் கோபத்துடன் எதிர்கொண்டாராம் பிரதமர் மோடி. பிரதமர் மோடி அப்படியான ஒரு கோபத்துடன் முன்னெப்போதும் இருந்தது இல்லையாம். அத்தருணத்தில், ரிசர்வ் வங்கியில் இருக்கிற பணக் குவியல் மீது ஒரு பாம்பு மாதிரி உர்ஜித் பட்டேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என வார்த்தைகளை கொட்டினாராம் பிரதமர் மோடி.
மேலும் இந்தக் கூட்டத்தில், நாட்டின் ரிசர்வ் வங்கி எப்படி எல்லாம் செயல்பட்டிருக்க வேண்டும்; ஆனால் அந்த போக்கில் ரிசர்வ் வங்கி செயல்படாமல் மெத்தனம்காட்டிவிட்டது எனவும் பிரதமர் மோடி ஆதங்கப்பட்டுள்ளார்.
முன்னதாக வாராக் கடன்கள் விவகாரத்திலும் உர்ஜித் பட்டேல் காட்டமான நிலைப்பாடுகளை மேற்கொள்ள முடிவு செய்திருந்தார். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இதனை விரும்பவில்லை. இதனையடுத்து வேறுவழியே இல்லாமல் உர்ஜித் பட்டேல் தமது ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார்.












Click it and Unblock the Notifications