உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டு பூஜையில் 'என்ட்ரியான' மோடி-வரிந்து கட்டி விளாசும் எதிர்க்கட்சிகள்!
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வீட்டில் நடைபெற்ற பிள்ளையார் (கணபதி) பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென பங்கேற்றது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பிரதமர் மோடியின் நடவடிக்கையால் நீதித்துறை மீது சந்தேகங்கள் எழும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன. ஆனால் கணபதி பூஜையில் பங்கேற்பது ஒரு கலாசார நிகழ்வு.. அதைமட்டும்தான் பார்க்க வேண்டும் என்கிறது பாஜக.
வட இந்திய மாநிலங்களில்தான் விநாயக சதுர்த்தி (கணபதி பூஜை) வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். பொதுவாக 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி பூஜைகள் நடைபெறும். கடந்த சனிக்கிழமை முதல் கணபதி பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று திடீரென சென்றார். பிரதமர் மோடியை சந்திரசூட், அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் வரவேற்றனர். பின்னர் விநாயகர் பூஜையில் மோடியும் பங்கேற்று ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்.
நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கிறவர்கள் அரசியலில் இருந்து விலகி நிற்க வேண்டும். சிவசேனா தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் முன்னிலையில் நிலுவையில் இருக்கிறது. பிரதமர் மோடியுடனான சந்திப்பால் எங்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்பது சந்தேகமாக இருக்கிறது. ஆகையால் இந்த வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி சந்திரசூட் தாமாக விலகிக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு கட்சியுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருக்கிறார் சந்திரசூட். அப்படியான நிலையில் சந்திரசூட் எப்படி நியாயமான தீர்ப்பை தருவார்? என எதிர்பார்க்க முடியும்? என்றார்.

இதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பிரதமர் மோடியின் இந்த சந்திப்புக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் பாஜகவோ, கணபதி பூஜை என்பது ஒரு கலாசார நிகழ்வு. அதில் பிரதமர் மோடி பங்கேற்றதில் எந்த தவறும் இல்லை. இதையுமா அரசியலாக்குவது? என கொந்தளிக்கிறது.












Click it and Unblock the Notifications