BYJUS நிறுவனம் சொல்வதை நம்ப முடியவில்லை.. விசாரணை நடத்த கார்த்தி சிதம்பரம் கோரிக்கை
டெல்லி: BYJUS நிறுவனத்தின் விளம்பரங்கள் மற்றும் அதன் நிதி வரத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு செய்தி லிங்க்கை கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:

முழுப் பக்க விளம்பரம்
அக்டோபர் 2 ம் தேதி ஒரு ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்ட முழு பக்க விளம்பரத்தில், ஜாக்ரிதி அவஸ்தி முகம் காட்டப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு, செப்டம்பர் 26 அன்று, மத்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) நடத்திய மூன்று கட்ட சிவில் சர்வீசஸ் தேர்வின் முடிவுகளை அறிவித்தது. அதில் அவஸ்தி தேர்ச்சி பெற்று, நாட்டில் இரண்டாவது இடத்தைப் பெற்றார். கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ், அதன் சிவில் சர்வீஸ் கோச்சிங் மூலம், ஜாக்ரிதி அவஸ்தி வெற்றி பெற உதவியதாக அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பயிற்சி பெறவில்லையாம்
சர்தக் அகர்வால் (அகில இந்திய ரேங்க் 17) புகைப்படமும் அந்த விளம்பரத்தில் வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றவர் அவர். ஆனால் BYJUS நிறுவனத்திடமிருந்து அவர் எந்த கட்டண பயிற்சியையும் பயன்படுத்தவில்லை என்று எங்களிடம் தெரிவித்தார் (அதாவது செய்தி வெளியிட்ட வெப்சைட்டிடம்).

டாப் 100ல் 36 பேராம்
முழு பக்க விளம்பரத்தில் டஜன் கணக்கான தேர்வாளர்கள் படங்கள் இடம்பெற்றிருந்தது. தேர்வான முதல் 100 பேரில் 36 பேர் BYJUS நிறுவனத்தின் மூலம், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகியுள்ளதாகவும், மொத்தமுள்ள 761 ரேங்குகளில் 281 பேர், அதாவது சுமார் 37% BYJUS நிறுவனத்திடம் பயின்றதாகவும் அந்த விளம்பரம் தெரிவித்திருந்தது. அது உண்மையாக இருந்தால், ஒரு பெரிய போட்டித் தேர்வுத் தேர்வில் 37% சதவீதம் பேருக்கு ஒரே நிறுவனம் பயிற்சி அளித்திருப்பது மிகப்பெரிய விஷயமாகும்.

கடினமான தேர்வுகள்
ஐஏஎஸ் பேட்ஜ் 2020-ஐ தேர்வு செய்வதற்காக 10.4 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில், வெறும் 10,564 பேர் ஜனவரி மாதம் நடைபெற்ற எழுத்து அல்லது "மெயின்ஸ்" சுற்றுக்கு தகுதி பெற்றனர். இந்தக் குழுவில், 2,053 பேர் இறுதிச் சுற்றில் ஆளுமைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். இறுதியில், 10,40,060 பேரில் 761 பேர் மட்டுமே அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று இந்தியாவின் ஐஏஎஸ் அதிகாரிகளாக மாறினர். 2019 ஆம் ஆண்டில், சுமார் 11.35 லட்சம் விண்ணப்பதாரர்களில், 2,034 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர் மற்றும் 927 பேர் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு செயல்முறையின் மூன்று நிலைகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், வெற்றி விகிதம் 0.07% முதல் 0.08% வரை மட்டுமே இருக்கும். அவ்வளவு கடினமான தேர்வு நடைமுறை இதுவாகும். ஆனால், அதில் 37 சதவீதம் பேர் தங்களிடம் படித்தவர்கள் என்று BYJUS கூறுவது வியப்பாக உள்ளது. இவ்வாறு அந்த செய்தி வெப்சைட் தெரிவித்துள்ளது.

விசாரணை கோரும் கார்த்தி சிதம்பரம்
இலவசமாக BYJUS ஆன்லைன்லில் நேர்காணல் ஒத்திகை நடத்தியதாகவும், அதில் வெறும் அரை மணி நேரம் பங்கேற்றதாகவும், அதையும் தங்களிடம் பயின்ற மாணவர்கள் என்ற பட்டியலில் சேர்த்து விட்டதாக சில வெற்றியாளர்கள் தெரிவித்ததாக அந்த வெப்சைட்டில் கூறப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்துள்ள கார்த்தி சிதம்பரம், BYJUS நிறுவன விளம்பரங்கள் மற்றும் அதன் நிதி ஆதாரம் குறித்த விவரங்களை விசாரிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications