திருப்பதி லட்டு: ஒடிஷா, ஹரியானா.. வடக்கே தேர்தல் நடந்தால் தமிழகம் மீது பழி போடுவதும் 'வியூகமா'?
டெல்லி: வட இந்திய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் போது 'இந்துக்களின்' வாக்குகளை 'ஒருங்கிணைக்க' தமிழகத்தின் மீது பழியைப் போட்டுவிடுவது அண்மைக்காலமாக 'தேர்தல் வியூகமாக'வே உருவெடுத்திருக்கிறது. ஒடிஷா தேர்தலின் போது பூரி ஜெகநாதர் கோவில் கருவூல சாவிகள் தமிழகத்தில் பதுக்கப்பட்டுள்ளதாக பிரசாரம் செய்யப்பட்டது; தற்போது ஹரியானா தேர்தல் நடைபெறும் நிலையில் ஆந்திரா திருப்பதி கோவில் லட்டுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் மாட்டு கொழுப்பை கலந்துவிட்டதாக கிளப்பிவிடப்பட்டிருக்கிறது என்பதை முன்வைத்து அரசியல் பார்வையாளர்கள் இந்த கேள்வியை எழுப்புகின்றனர்.
சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் வெல்வதுதான் அனைத்து அரசியல் கட்சிகளின் உத்தி. அதற்காக ஒரு அறத்துக்குட்பட்ட வழிகளைக் கையாள்கிற, வியூகம் வகுக்கிற போக்குகள் எதுவும் ஜனநாயகத்தில் இல்லாமலேயே போய்விட்டது. அதிகார போதையை ருசிப்பதற்காக அறமற்ற, ஈவிரக்கமற்ற, உயிர்களைக் குடித்தேனும் வாக்குகளை ஒருங்கிணைக்கிற பேராபத்தான நச்சு சக்திகள் தலையெடுத்துவிட்டதால்தான் இத்தகைய ஜனநாயகப் பேரவலங்கள் தொடருகின்றன.

இதன் புதிய யுக்தியாக, வட இந்தியாவில் தேர்தல் பிரசாரம் செய்யும் போது எல்லாம், தமிழ்நாட்டையும் தென்னிந்தியாவையும் வட இந்தியர்களுக்கு எதிராக குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக மடைமாற்றுகிற போக்கு தொடருகிறது. லோக்சபா தேர்தல் பிரசாரத்த்தின் போது, சனாதனத்தை அழிக்க தென்னகம் பார்க்கிறது; சனாதனத்தை பின்பற்றுவோரை அழிக்கப் பார்க்கிறார்கள் தமிழர்கள் என பிரசாரம் செய்த அட்டூழியத்தை காதுபட கேட்டோம். அதுவும் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழர்களை ஆஹோ ஓஹோவென புகழ்ந்து பேசிவிட்டுப் போன உடனேயே இந்த அக்கிரமப் பேச்சுகள் அரங்கேறின.
இதன் உச்சமாக ஒடிஷாவில் லோக்சபா, சட்டசபை தேர்தல் இணைந்து நடத்தப்பட்ட போது, பூரி ஜெகநாதர் கோவில் கருவூல சாவியை தமிழ்நாட்டுக்கு கொண்டு போய் பதுக்கிவிட்டார்கள் என தமிழர்களுக்கு திருட்டுப் பட்டம் கட்டினார்கள். அத்துடன் நிற்கவில்லை.. ஒடிஷா மக்களே! தமிழரான விகே பாண்டியனா உங்களை ஆட்சி செய்ய அனுமதிப்பது என பிரசாரம் செய்தனர். இத்தகைய விஷமப் பிரசாரமே தேர்தலில் அத்தகைய அநீதியாளர்களுக்கு அமோக அறுவடையைக் கொடுத்தது என்பதுதான் யதார்த்தம்.
தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் கள நிலவரம் வேறு. ஹரியானாவின் கள நிலவரம் வேறு. ஹரியானாவில் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கும் அரசியல் சக்திகள், எப்படியாவது இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியாதா என போராடிக் கோண்டிருக்கின்றன. இத்தகைய தருணத்தில்தான் மீண்டும் தமிழ்நாடு மீதும் தென்னிந்தியா மீதும் பழி போடுகிறார்கள். திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை கலந்துவிட்டார்கள்; அதுவும் தமிழ்நாட்டு நிறுவனம் அனுப்பிய நெய்யில்தான் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டுவிட்டது என பரப்பிவிட்டிருக்கிறார்கள். பசுமாட்டின் சிறுநீர் புனிதமானது; பசுமாட்டின் கழிவான சாணம் புனிதமானது; பசுமாட்டின் ரத்தமான பால் புனிதமானது; பசுமாட்டின் பாலில் இருந்து பெறப்படும் தயிர் புனிதமானது என பேசுகிற சக்திகளே, அய்யய்யோ பசுமாட்டின் கொழுப்பையும் கலந்து விட்டார்களே என வயிற்றில் அடிக்கிறார்கள்.. அவர்களுக்கே தெரியும்... ஹரியானா தேர்தல் முடியும் வரை இந்த ஒப்பாரி நீடிக்கட்டும் என்பது! ஏன் இப்படியான ஒரு அரசியல் பிழைப்பு? அப்படி என்னதான் அதிகாரத்தின் போதை வெறியோ?












Click it and Unblock the Notifications