நாடாளுமன்ற பணியாளர்களுக்கு இனி புதிய சீருடை.. எப்படி இருக்க போகுது? தாமரை பூ டிசைன் தான் ஹைலைட்
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பாராளுமன்றம் மாற உள்ள நிலையில், ஆண் பணியாளர்களுக்கு கிரீம் வண்ண சட்டை,காக்கி வண்ண பேண்ட் என புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வரும் 19ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் , பணியாளர்கள் அனைவருக்கும் புதிய சீருடை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டை மற்றும் பேண்ட் இரண்டிலும் சிறிய அளவிலான தாமரை பூ டிசைன் இடம்பெற்றுள்ளது என்றும் தேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. இதில் நாடாளுமன்ற ஊழியர்கள் பல மாற்றங்களுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த சூழலில் அவர்கள் புதிய சீருடைகளுக்கு மாற போகிறார்கள் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் மார்சல் சபாரி உடைக்கு பதிலாக, ஆண் பணியாளர்களுக்கு குர்தா, பைஜாமா தரப்பட உள்ளதாம். நாடாளுமன்றத்தை பாதுகாக்கும் பாதுகாப்புக் குழுவும் புதிய சீருடையைப் பெற போகிறார்களாம். சீருடையில் தாமரைபூ டிசைன் இடம் பெறும் என்றும் சொல்கிறார்கள். பெண் ஊழியர்களுக்கு இப்போது உள்ள பழைய டிசைன் புடவைக்கு பதிலாக புதிய டிசைன் புடவைகள் வழங்கப்பட உள்ளதாம்.
கடந்த ஜூன் 1 ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் கூட்டத்தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதனிடையே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தின் முதல் நாள், பழைய கட்டிடத்திலும், இரண்டாவது நாள் முதல் புதிய கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. அதாவது விநாயக சதுர்த்தியொட்டி செப்டம்பர் 19 அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் மாற்றப்பட உள்ளதாம்.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு அமர்வில், பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் 'ஒரே நாடு-ஒரே தேர்தல்' தொடர்பான மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக செப்டம்பர் 18 முதல் 22 வரை 5 நாள் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். ஆனால் இதுவரை நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படவில்லை.
இந்த புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவில், சபாநாயகர் நாற்காலிக்கு அருகில், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க 'செங்கோல்' பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்பட்டது.
முன்னதாக இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.ஆனால் பாஜக அந்த கோரிக்கைக்கு கடைசி வரை பதில் அளிக்கவில்லை. இதனால் அந்த விழாவினை எதிர்க்கட்சிகள் அன்று புறக்கணிக்கவும் செய்தன.
இதனிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள் குறிது முக்கியமான சில தகவல்களும் வெளியாகி உள்ளன. பல தேசிய ஊடகங்களில் தகவலின் படி, சிறப்பு அமர்வின் போது இந்தியாவை 'பாரத்' என மறுபெயரிடுவதற்கான மசோதாவை பாஜக தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது. 'இந்தியா' என்ற பெயர் காலனித்துவ பாரம்பரியத்தின் எச்சம் என்றும், எனவே அந்த பெயரை கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்றும் பாஜக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications