இந்தியாவில் 24 மணி நேரத்தில் 4100 பேர் கொரோனாவில் பலி.. பரபரப்பை கிளப்பிய அறிக்கை.. பீதி வேண்டாம்
டெல்லி : மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும், 4100 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியதோடு, உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பையும் உருவாக்கியது.
அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மீண்டும் ஆட்டத்தை துவக்கிய நிலையில் தற்போது சற்றே அடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே தினசரி பாதிப்பு எண்ணிக்கை சரிவைச் சந்தித்து வருகிறது. நாளொன்றுக்கு 2 ஆயிரத்துக்குள் உள்ள நிலையில், தமிழகம் போன்ற மாநிலங்களில் கொரோனா தினசரி பாதிப்பு 50க்குள் என்ற எண்ணிக்கையிலும், பல மாவட்டங்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா 3வது அலைக்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

திடீரென உயர்ந்த பலி எண்ணிக்கை
இந்நிலையில் தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும், 4100 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,660 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியான நிலையில், இந்தியாவின் மொத்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,30,18,032 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு விளக்கம்
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4,100 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,20,855 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பில் திடீர் உயர்வுக்கு காரணம் என்ன என்பதையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கியுள்ளது. இதுநாள்வரை , மகாராஷ்டிரா மாநிலத்தில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 4,005 பேரும், கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கையில் 79 பேரும் இன்றைய கொரோனா உயிரிழப்பில் சேர்க்கப்பட்டதே இந்த உயர்வுக்கு காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

182 கோடி டோஸ் தடுப்பூசிகள்
ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2,349 பேர் மீட்கப்பட்டுள்ளதன் மூலம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,80,436 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் காலை 8 மணிவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 182.87 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் மொத்தம் 6,58,489 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 78.63 கோடி சோதனைகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications