காதுல ஹெட்செட் மாட்டி வண்டி ஓட்டாதீங்கன்னா கேக்குறாங்களா.. சென்னை அருகே கோர விபத்து.. இளைஞர் பலி
செங்கல்பட்டு: சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவரது மகன் தீனதயாளன்.
தீனதயாளன் வைட் ஹவுஸ் என்கிற தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

ஹெட்செட்டில் பாட்டு கேட்டப்படி
தீனதயாளன் எப்போதும் தான் வைத்திருக்கும் பல்சர் மோட்டார் சைக்கிளில் தான் வேலைக்கு செல்வார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்றும் அவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு மாலையில் மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் ஹெட்செட்டில் ஜாலியாக பாட்டு கேட்டப்படியே வந்ததாக தெரிகிறது.

மோட்டார் சைக்கிள் மீது மோதியது
ஊரப்பாக்கம் அருகே சாலையில் வந்துகொண்டிருந்த போது, பின்னால் வந்துகொண்டிருந்த டாட்டா ஏசி என்கிற நான்கு சக்கர வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட தீனதயாளன் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து துடித்துக்கொண்டிருந்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தீனதயாளனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு
தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீனதயாளன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தீனதயாளன் உடலை மீட்ட போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவினர்கள் சோகம்
முதல்கட்ட விசாரணையில் தீனதயாளன் ஹெட்செட்டில் பாட்டு கேட்டு வந்துகொண்டிருந்ததால் தான் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications