ஜெயிலில் வெயிட் போட்ட ஆம் ஆத்மி அமைச்சர்.. லீக்கான 2வது வீடியா! ஆனா கோர்ட்டில் சொன்னது என்ன தெரியுமா
டெல்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சருக்கு அறுசுவையான உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் 8 கிலோ வரை எடை கூடியுள்ளதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே சிறையில் மசாஜ் செய்து கொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு ஆம் ஆத்மி தரப்பிலிருந்து சில 'சமாளிப்புகள்' வந்தன.
ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத பாஜக சத்யேந்தர் ஜெயினை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் தற்போது புதிய வீடியோ வெளியாகி ஆம் ஆத்மிக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.
சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் 'ரேபிஸ்ட்'.. சிறைத்துறை விளக்கம்.. ஐயோ.. 'ஜெர்க்' ஆன ஆம் ஆத்மி
டெல்லி தேர்தல்
டெல்லியில் டிசம்பர் 4ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நான்காவது முறையாக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் வசித்து வரும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க இருக்கிறார். மேலும் பல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறார். இதனை மக்களிடத்தில் தேர்தல் பிரசாரமாக கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால், டெல்லியில் ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி பாஜகவுக்கு பயங்கர 'டஃப்' கொடுத்து வருகிறது.
குஜராத்தில் நெருக்கடி
மாநகராட்சி ஊழியர்களுக்கு உயிரிய காலத்தில் ஊதியம், டெல்லியை குப்பைகளற்ற நகரமாக மாற்றுவது என 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உள்ளாட்சி தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், மறுபுறம் குஜராத்திலும் வலுவான பிரசாரத்தை ஆம் ஆத்மி மேற்கொண்டு வருகிறது. கடந்த தேர்தல் வரை குஜராத்தில் பாஜக-காங்கிரஸ் என்றுதான் இருந்தது. ஆனால் தற்போது ஆம் ஆத்மியும் போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தற்போது குஜராத்திலும் பாகஜவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
சிறையில் சத்யேந்தர்
இந்நிலையில்தான் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர ஜெயினின் வீடியோ வெளியானது. டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ சத்யேந்தர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதனை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறையும், இவர் மீதும் இவரது மனைவி உட்பட 10 பேர் மீது 'நிதி மோசடி' வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் விசாரணைக்கு சத்யேந்தர் ஜெயின் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அமலாக்கத்துறை கடந்த மே மாதம் இவரையும் இவரது நண்பர்கள் இரண்டு பேரையும் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது. இவ்வாறு, இருக்கையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கோரி கடந்த ஜூன் மாதம் சத்யேந்தர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டது.
மசாஜ் வீடியோ
இவ்வாறு ஜாமீன் மறுக்கப்பட்டு 'திகார்' சிறையில் உள்ள சத்யேந்தர் ஜெயின் 'மசாஜ்' செய்துகொள்வதை போல வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எளிமைக்கு பெயர்போனவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர் என்று சொல்லிக்கொண்டு இப்படி சிறைச்சாலையிலேயே சொகுசு வசதிகளை செய்துகொள்ளலாமா? என்று இந்த வீடியோ குறித்து பாஜக கேள்வியெழுப்பியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த ஆம் ஆத்மி, சத்யேந்தர் ஜெயின் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் என்றும் எனவே அவருக்கு 'பிசியோதெரபி சிகிச்சை' அளிக்கப்பட்டதாகவும் விளக்கமளித்திருந்தது. மேலும், "உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் ஒருவரை இப்படி கீழ்த்தரமாக விமர்சிக்க பாஜகவால் மட்டுமே முடியும்" என்றும் குற்றம்சாட்டியிருந்தது.
போக்சோ குற்றவாளி
இதற்கிடையில் நேற்று ஒரு தகவல் திகார் சிறை நிர்வாகம் தரப்பில் வெளியாகியிருந்தது. அதாவது, சிறையில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு 'மசாஜ்' செய்த நபர் 'பிசியோதெரபிஸ்ட்' கிடையாது என்றும், அந்த நபர் 'போக்சோ' குற்றவாளி எனவும் விளக்கமளித்திருந்தது. இது ஆம் ஆத்மிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இப்படி தொடர்ந்து கட்சி நெருக்கடியில் சிக்கிவரும் நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அதில் சத்யேந்தர் ஜெயின் சிறையில் அறுசுவை உணவை எடுத்துக்கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
புதிய வீடியோ
இதன் காரணமாக அவர் 8 கிலோ வரை எடை கூடி இருந்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், சத்யேந்தரின் உடல்நிலை குறித்து முன்னதாக நீதிமன்றத்தில் அவர் தரப்பு வழக்கறிஞர், "சத்யேந்தர் சிறையில் இருப்பதால் 28 கிலோ எடை குறைந்துள்ளார்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து தேர்தல் வரும் நிலையில் ஆம் ஆத்மியின் வாக்கு வங்கியை குறைக்கவே இவ்வாறு வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன என்று ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.