மதுபான முறைகேடு வழக்கு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிம்மதி! ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தனக்கு ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21 ஆம் தேதி கைது செய்தது. விசாரணைக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 10 ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜூன் 2 ஆம் தேதி அவர் சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனுவில், எனது எடை மிகவும் குறைந்துள்ளது. ஒருவருக்கு எவ்வித காரணமும் இல்லாமல் ஒரு மாதத்தில் 7 கிலோ எடை குறைந்தால் அது தீவிர பிரச்சினை. எனவே, மருத்துவர்கள் எனக்கு பல்வேறு பரிசோதனைகளை பரிந்துரை செய்துள்ளனர். அனைத்து பரிசோதனைகளும் செய்தால்தான், உள்ளே ஏதாவது தீவிர நோய் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும் என்றும் கூறியுள்ளனர்.
எனவே நான் சிறையில் மீண்டும் சரணடைய 7 நாட்கள் அவகாசம் வேண்டும் எனக் கோரி இருந்தார். அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளி வைத்துள்ளது.
ஜாமீன் கோரி சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுக கெஜ்ரிவாலை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதால் இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல என உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 2ல் மீண்டும் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனுவை கெஜ்ரிவால் தாக்கல் செய்தார்.
இந்த ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என அவரது தரப்பு வாதிட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்தது. கெஜ்ரிவால் நாளை சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாமீன் உத்தரவு சிறைக்கு கிடைத்த பிறகு கெஜ்ரிவால் விடுதலை செய்யும் நடைமுறைகள் தொடங்கும்.












Click it and Unblock the Notifications