பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு கவிழும் அபாயம்? காங்கிரஸ் கட்சிக்கு தாவும் 32 எம்.எல்.ஏக்கள்?
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் 32 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து சில எம்.எல்.ஏக்கள் பாஜக பக்கம் தாவக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
பஞ்சாப் சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 93 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் 32 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் பக்கம் தாவ இருக்கின்றனர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரதாப் பஜ்வா வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

117 எம்.எல்.ஏக்களை கொண்ட பஞ்சாப் சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கூறுவதைப் போல 32 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவினாலும் கூட தற்போதைய நிலையில் ஆம் ஆத்மி அரசு கவிழாது என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
அத்துடன் காங்கிரஸ் கட்சி கடந்த பல மாதங்களாக இப்படியான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது; ஆனால் ஆம் ஆத்மியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ. கூட இதுவரை விலகவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரையில் முதலில் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் பஞ்சாப்பில் அதிகாரத்துக்கு வந்தது. ஹரியானா, குஜராத் மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கால் பதிக்க போராடுகிறது. இந்த நிலையில் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்தே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசுக்கும் நெருக்கடி உருவாகிக் கொண்டிருப்பதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications