பாஜகவுக்கு வெறும் 400 தானா? 700 இடங்கள் கிடைக்கும்.. எப்படி தெரியுமா? ஆம் ஆத்மி எம்.பி கிண்டல்!
டெல்லி: எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாஜகவுக்கு 700 இடங்கள் கிடைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங் கிண்டலாக கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் நேற்று மாலையுடன் முடிவடைந்துள்ள நிலையில், ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பல்வேறு ஊடகங்களால் வெளியிடப்பட்டு உள்ளன.

2019 ஆம் ஆண்டை விட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் இடங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளன. இந்தியா கூட்டணி மொத்தமாகவே 200க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்கின்றன எக்ஸிட் போல் கணிப்புகள்.
ஏபிபி - சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்:
பாஜக கூட்டணி: 353-383
இண்டியா கூட்டணி: 152-182
மற்றவை: 4-12
இந்தியா டிவி - CNX எக்ஸிட் போல்:
பாஜக கூட்டணி: 371-401
இண்டியா கூட்டணி: 109-139
மற்றவை: 28-38
என்டிடிவி-ஜான் கி பாத் கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 365
இண்டியா கூட்டணி: 142
மற்றவை: 36
ரிபப்ளிக் டிவி - Matrize எக்ஸிட் போல்:
பாஜக கூட்டணி: 353 - 368
இண்டியா கூட்டணி: 118 - 133
மற்றவை: 43 - 48
ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு:
பாஜக கூட்டணி: 362 - 392
இண்டியா கூட்டணி: 141 - 161
மற்றவை: 10 - 20
இந்தியா நியூஸ் - டி டைனமிக்ஸ் எக்ஸிட் போல்:
பாஜக கூட்டணி - 371
இண்டியா கூட்டணி - 125
மற்றவை - 47
நியூஸ் நேஷன் எக்ஸிட் போல்:
பாஜக கூட்டணி - 342-378
இண்டியா கூட்டணி - 153-169
மற்றவை - 21-23
டைனிக் பாஸ்கர் எக்ஸிட் போல்:
பாஜக கூட்டணி: 281 - 350
இண்டியா கூட்டணி: 145 - 201
மற்றவை: 33 - 49
பாஜகவுக்கு 700 சீட்: இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி சஞ்சய் சிங், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். சஞ்சய் சிங் கூறுகையில், "எக்ஸிட் போல் முடிவுகளில், அகண்ட் பாரதத்தின் 700 இடங்களை பாஜக பெறுகிறது" எனக் கூறியுள்ளார்.
மேலும், "இந்தியாவில் 200 இடங்களும், பாகிஸ்தானில் 100 இடங்களும், ஆப்கானிஸ்தானில் 70 இடங்களும், இலங்கையில் 50 இடங்களும், பூட்டானில் 50 இடங்களும், நேபாளத்தில் 50 இடங்களும், தாய்லாந்தில் 50 இடங்களும், இந்தோனேசியாவில் 30 இடங்களும், ஈரானில் 30 இடங்களும் பாஜக பெறுகிறது." என கிண்டல் செய்துள்ளார் சஞ்சய் சிங்.
பாஜக ஆபீசில் தயாரிக்கப்பட்ட எக்ஸிட் போல்: மேலும், "இந்த கருத்துக்கணிப்பு பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது. தமிழகத்தில் பாஜக 34% வாக்குகளைப் பெறுகிறது என்பதை யார் நம்புவார்கள்? பாஜக மிகப்பெரிய நாடகம்) நடத்தியுள்ளது. அதை மறைக்க, இது போன்ற எண்கள் காட்டப்படுகின்றன. உண்மை ஜூன் 4 ஆம் தேதி வெளிவரும்" என ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
கருத்துக் கணிப்புகள் குறித்தும் கேள்விகளை எழுப்பிய சஞ்சய் சிங், 20-25 ஆயிரம் பேரின் மாதிரியை எடுத்து 144 கோடி பேர் மதிப்பிடப்பட்டுள்ளனர். இந்த கருத்துக் கணிப்புகள் பாஜகவும், மோடியும் வழங்கியவை. கருத்துக்கணிப்புகளில் எப்போதும் பாஜக மட்டும்தான் வெற்றி பெறுகிறது என விமர்சித்துள்ளார்.
இந்தியா 295 கன்ஃபார்ம்: இந்தியா கூட்டணி வெற்றி பெறும் இடங்கள் குறித்து, இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு சஞ்சய் சிங் பேசி இருந்தார். இந்தியா கூட்டணி 295 இடங்களைப் பெறுகிறது என்றும் நாங்கள் ஆட்சி அமைப்போம், இது அரசு எடுத்துள்ள கருத்துக்கணிப்பு ரிப்போர்ட் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதே நேரத்தில், மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை பிரதமராக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளதாக பாஜக தலைவர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். இப்போது இந்தியா கூட்டணித் தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி கதறத் தொடங்குவார்கள் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications