கட்சி தாவிய ஆம் ஆத்மி எம்.பிக்கள் தகுதி நீக்கம் இல்லை.. ஏன் தெரியுமா? 10வது அட்டவணை சொல்வது என்ன?
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 மாநிலங்களவை எம்.பிக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்கள் பாஜகவில் இணைவதற்கு, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா?
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் 10 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் ஏழு பேர் கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்ய ஒருங்கிணைந்தனர். ராகவ் சத்தா, சந்தீப் பதக், ஸ்வாதி மாலிவால், அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், ராஜேந்தர் குப்தா, விக்ரம்ஜித் சிங் சாஹ்னி உள்ளிட்ட 7 பேரும் தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர்.

ராகவ் சத்தா உள்ளிட்ட 7 ராஜ்யசபா எம்.பிக்களின் இணைப்புக்கு மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, 7 ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டதை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றார்.
ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறிய ராகவ் சத்தா உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினை இழந்தது ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. தற்போது மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் மூன்றாகக் குறைந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங், அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் பத்தி 4-இன் கீழ் இந்த இணைப்பை எதிர்த்தும், கட்சி தாவிய அந்த 7 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரியும் மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் முறைப்படி மனு அளித்திருந்தார்.
இருப்பினும், ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணைந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று பத்தாவது அட்டவணை குறிப்பிடுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தமுள்ள 10ல் ஏழு எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததன் மூலம் இந்த நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநிலங்களவைத் தலைவர் இந்த இணைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
எனினும், 10வது அட்டவணையின் பத்தி 2 (1) (a)படி ஒரு அவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், எந்த அரசியல் கட்சியால் அவர் அந்த உறுப்பினராகத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டாரோ, அந்தக் கட்சியைச் சேர்ந்தவராகக் கருதப்படுவார். 10வது அட்டவணைப்படி, கட்சி உத்தரவை மீறுவதும் தகுதி நீக்க மனுவுக்கு வழிவகுக்கும்.
ஆம் ஆத்மி கட்சியால் கட்சி தாவிய இந்த 7 எம்.பிக்களுக்கு தொடர்ந்து கட்சி உத்தரவு பிறப்பிக்க முடியும், அவர்களும் அதை மீறிக் கொண்டே இருக்கலாம். இந்த அடிப்படையில் தாக்கல் செய்யப்படும் எந்தவொரு தகுதிநீக்க மனு மீதும் ராஜ்யசபா தலைவரே முடிவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications