புத்தாண்டில் பிரதமர் தந்த பரிசு... விவசாயிகள் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்த தலா 2000 ரூபாய்!
டெல்லி: பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பத்தாவது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. தலா 2000 வீதம் மூன்று தவணைகளாக பணம் செலுத்தபடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
சூப்பர் ஹீரோ.. சென்னை டிராபிக்கில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. 5 கிமீ நடந்தே போய் வழி உண்டாக்கிய நபர்.. செம
பிரதமரின் கிஷான் திட்டம்
இதுவரை 9 தவணைகளாக நிதி உதவி வழங்கப்பட்டு நிலையில் தற்போது சுமார் பத்துக்கோடி விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அவரவர் வங்கிக் கணக்குகளை செலுத்தப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிஷான் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இந்த ஆண்டுக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.
விவசாயிகளுக்கு பங்கு மானியம்
9 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், கிஷான் திட்டத்தின் கீழ் பிரதமர் விவசாயிகளுக்கு 14 கோடிக்கும் அதிகமான பங்கு மானியத்தையும் வழங்கினார். மேலும் 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் பெயரிலும் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முந்தைய தவணை ஆகஸ்ட் 2021ல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம்
இந்தத் திட்டம் குறித்து பேசிய மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவும் வகையில் அரசாங்கத்தின் முயற்சியாக pm-kisan தொடங்கப்பட்டது என்றும் , 2022 ஆம் ஆண்டின் முதல் நாளில், சுமார் 10.09 கோடி பயனாளிகளுக்கு ரூ.20,900 கோடி மாற்றப்படுகிறது என்றும் அவர் கூறினார். மேலும் நடப்பு ஆண்டிலேயே இத்திட்டத்தின் கீழ் 65,800 கோடி ரூபாய் விடுவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
விவசாயிகளுடன் உரையாடிய பிரதமர்
நிகழ்ச்சியை தொடர்ந்து விவசாயிகள், உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், உற்பத்தியாளர்களிடம் பேசிய பிரதமர் விவசாயிகள் நாட்டின் உயிர்மூச்சு எனவும், அவர்களை பாதுகாப்பதுதான் அரசின் கடமை என்றும் பேசினார். மேலும் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் உற்பத்தி குழுவினருடனும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்