அந்த மனசுதான் சார் கடவுள்!.. மகனுக்காக நெப்போலியன் கட்டிய மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை
டெல்லி: தனது மகனுக்காக கட்டிய மருத்துவனையில் நடிகர் நெப்போலியன் ஏழை குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா. சிம்பு என முன்னணி நடிகர்கள் கோலோச்சிய போதிலும் தனக்கென ஒரு தனித்துவமான ஸ்டைலால் அனைவரையும் கவர்ந்தவர் நெப்போலியன்.
இவர் புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து அதிரடியாக நடித்து வந்த நெப்போலியனுக்கு ஆக்ஷன் ஹீரோ என்ற பெயரும் கிடைத்தது.

எஜமான் படம்
ரஜினி நடித்த எஜமான் படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான அவர் திமுகவில் எம்பியாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தார். இதையடுத்து அவரது மகனுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

டென்னிசி மாகாணம்
அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் உள்ள நேஷ்வில்லே நகரில் வசித்து வருகிறார். அங்கு ஒரு ஐடி கம்பெனியையும் இவர் நடத்தி வருகிறார். மேலும் விவசாயமும் செய்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் நெப்போலியன் அளித்த பேட்டியில் தனது மகனுக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்தும் அதற்காக அவர் உலக தரத்தில் கட்டிய மருத்துவமனை குறித்து தெரிவித்திருந்தார்.

மகன் தனுஷ்
அதன்படி நெப்போலியனின் மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் ஏற்பட்டுள்ளது. அவருக்கு 4 வயதாக இருக்கும் போதே இந்த நோயை கண்டுபிடித்துவிட்டார்களாம். அவருக்கு 10 வயது இருக்கும் போது அவர் நடக்க மாட்டார் என மருத்துவர்கள் சொன்னார்களாம். அவர்கள் சொன்னபடியே 10 வயதுக்கு மேல் குழந்தை தனுஷால் நடக்க முடியாமல் போனது.

உலகம் முழுவதும் தேடியும் மருந்து கிடைக்கவில்லை
உலகம் முழுவதும் தேடியும் இந்த நோய்க்கு மருந்து கிடைக்கவில்லையாம். இதையடுத்து பாரம்பரிய வைத்தியம் மூலம் படிப்படியாக குணப்படுத்த முடியும் என சொன்னதை அடுத்து நெல்லையில் ஒரு கிராமத்தில் இந்த நோய்க்காக பாரம்பரிய வைத்தியம் செய்து வருவதை அறிந்த நெப்போலியன் அங்கும் தனது மகனை அழைத்து சென்றாராம்.

பெரிய வீடு வாடகைக்கு
அங்கு அவர்கள் நன்றாக சிகிச்சை அளித்த நிலையில் பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு மகனுக்கு சிகிச்சை கொடுத்து வந்தார். இவர் மத்திய இணை அமைச்சராக இருந்த போது இந்த மருத்துவ விவகாரம் வெளியே வந்த போது இந்த தசை சிதைவு நோய் குறைபாடுள்ள குழந்தைகள் ஏராளமானோர் நெல்லையில் சிகிச்சைக்காக இந்தியா முழுவதிலும் இருந்து குவிந்தனராம்.

போதுமான வசதி
எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இடவசதி அங்கு இல்லாமல் இருந்தது. இதையடுத்து மருத்துவமனை ஒன்றை நெப்போலியன் கட்டி கொடுத்துள்ளார். இந்த மருத்துவமனையை தமிழகத்தின் முதல்வராக தற்போது இருக்கும் ஸ்டாலின்தான் திறந்து வைத்தாராம். கடந்த 12 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையை நெப்போலியன் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இலவச சிகிச்சை
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்கிறார்களாம். தன் மகனுக்கு கிடைக்கும் உயர் தர சிகிச்சை ஏழை எளியவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என நல்ல எண்ணத்தோடு இந்த மருத்துவமனையை நெப்போலியன் நடத்தி வருகிறார். இங்கு வருபவர்களிடம் ஒற்றை பைசா கூட வாங்காமல் வைத்தியம் பார்க்கப்படுகிறதாம்.












Click it and Unblock the Notifications