மாயமான நடிகர் ராணாவின் லக்கேஜ்.. "ச்சீ.." கடுப்பில் போட்ட ட்வீட்.. மன்னிப்பு கேட்ட இண்டிகோ நிறுவனம்
டெல்லி: பாகுபலி திரைப்பட நடிகர் ராணா டகுபதியின் விமான பயணத்தின் போது அவரது லக்கேஜ் மாயமான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது லக்கேஜ் காணாமல் போனதால் மிகவும் அதிருப்தியடைந்த ராணா டகுபதி, இண்டிகோ நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், கூடிய விரைவில் நடிகர் ராணாவின் லக்கேஜை கண்டுபிடித்து ஒப்படைத்து விடுவோம் இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
நாளைய முதல்வரே.. கூட்டணிக்கு தயாராவோம்.. நடிகர் விஜய் ரசிகர்களின் அசரவைக்கும் போஸ்டர்.. பரபர தேனி
மோசமான விமான சேவைகள்
மிகவும் அவசரத் தேவைக்காகவே பொதுமக்கள் விமானப் போக்குவரத்தை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், சில நேரங்களில் ஏன் விமானத்தை தேர்வு செய்தோம் என வருத்தப்படும் அளவுக்கு விமான நிறுவனங்கள் நம்மை ஆளாக்கிவிடும். குறிப்பிட்ட நேரத்தில் விமானத்தை எடுக்காமல் தாமதம் செய்வது; அவ்வாறு தாமதமாகும் பட்சத்தில் அதற்கான காரணத்தை பயணிகளிடம் கூறாமல் இருப்பது, விமான தாமதத்தால் பல மணிநேரமாக காத்திருக்கும் பயணிகளுக்கு தண்ணீர், உணவு கூட வழங்காமல் இருப்பது என சில விமான நிறுவனங்களின் செயல்கள் மிகவும் மோசமாக இருக்கும். அதுபோன்ற ஒரு அனுபவம்தான் தற்போது தெலங்கு நடிகர் ராணா டகுபதிக்கு ஏற்பட்டுள்ளது.
ராணா டகுபதி கோபம்
இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் தெரிவித்துள்ள ராணா டகுபதி, எந்த விமான நிலையம் எனக் குறிப்பிடவில்லை. அவரது ட்விட்டர் பதிவில், "இந்தியாவிலேயே மிக மோசமான விமானப் பயண அனுபவத்தை இண்டிகோ விமானத்தில் பெற்றிருக்கிறேன். தங்கள் விமானம் புறப்படும் நேரங்கள் கூட இண்டிகோவுக்கு தெரியவில்லை. எனது லக்கேஜ் காணாமல் போய்விட்டது. அதை இண்டிகோ நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்நிறுவனத்தின் அலுவலர்களிடம் இதுகுறித்து புகார் அளித்தால், அவர்களுக்கும் இதை எப்படி கையாள்வது என தெரியவில்லை. இதை விட மோசமான ஒரு விஷயம் இருக்கிறதா?" என அதில் ராணா குறிப்பிட்டுள்ளார்.
இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு
ராணா டகுபதியின் இந்த ட்விட்டர் பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதுடன் மட்டுமல்லாமல், இண்டிகோ நிறுவனத்தில் தங்களின் பயண அனுபவம் குறித்து ஆயிரக்கணக்கான நெட்டிசன்களும் விமர்சனத்தை அள்ளி வீசினர். இதனால் அதிர்ச்சியடைந்த இண்டிகோ நிறுவனம் ராணா ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளது. அதில், "எங்கள் விமானத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். மேலும், காணாமல் போன உங்கள் லக்கேஜை கூடிய விரைவில் ஒப்படைக்க எங்கள் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலை கிளப்பும் மற்றொரு வீடியோ
இது ஒருபுறம் இருக்க, இண்டிகோ விமான நிறுவனத்தில் எத்தனை அலட்சியமாக பயணிகளின் லக்கேஜ்களை கையாளுகிறார்கள் என்பது குறித்து வீடியோ ஒன்றை பயணி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், இண்டிகோ விமானத்தில் இருந்து பயணிகளின் லக்கேஜ்களை கண்டெய்னருக்கு மாற்றும் ஊழியர்கள், அவற்றுக்குள்ளே என்ன மாதிரியான பொருட்கள் இருக்கின்றன என்பது பற்றி கவலைப்படாமல் கன்னாபின்னாவென தூக்கி வீசுகிறார்கள். இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி, இண்டிகோ நிறுவனத்துக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.