கைதான ஏடிஜிபி ஜெயராம் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அப்பீல்.. நாளையே விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
டெல்லி: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அவரது மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை அவசரமாக விசாரிக்க உள்ளது. முன்னதாக சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், களாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ் (வயது 23). இவருக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இதற்கிடையே இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

சிறுவன் கடத்தல் வழக்கு
இந்த திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே கடந்த 6 ஆம் தேதி இரவு 12 மணிக்கு தனுஷின் வீட்டுக்குள் விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, வக்கீல் சரத் உள்ளிட்டோர் புகுந்து காதல் ஜோடியை தேடியுள்ளனர். அவர்கள் இல்லாததால், தனுஷின் 17 வயது தம்பியை காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து தனுஷின் தாயார் லட்சுமி போலீசில் புகார் செய்ததால், சிறுவனை மீனம்பாக்கம் அருகே விட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருவாலங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வனராஜா, கணேசன், பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் மகேஸ்வரி, வக்கீல் சரத் உள்ளிட்டோரை கைது செய்தனர். இவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியிடம் போலீசார் விசாரிக்க அவரது வீட்டுக்கு சென்றனர்.
ஏடிஜிபி ஜெயராம் கைது
அப்போது, அவர்களது ஆதரவாளர்கள் தடுத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, "சிறுவன் கடத்தல் வழக்கில் மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை'' என்று வாதிட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். வழக்கில் ஆஜராவதற்காக ஏடிஜிபி ஜெயராம் காவல் உடையில் வந்த நிலையில், போலீசார் கைது செய்வதற்கு முன்பாக சாதாரண உடைக்கு மாறினார். நீதிமன்ற வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதன்பின் போலீசார் அவரை திருவாலங்காடு காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழலில்தான், ஏடிஜிபி ஜெயராம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருக்கிறார். அவரது மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை அவசரமாக விசாரிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications