சர்னாவும் இந்து மதத்தில்.. ஆதிவாசிகளை மதம் மாற்றும் பாஜக அரசு! பொதுசிவில் சட்டத்தில் பேரதிர்ச்சி
டெல்லி: மத்திய அரசு கொண்டு வரும் பொதுசிவில் சட்டம் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பழங்குடியின மக்களையும் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. அப்படி என்ன சட்டம் அதில் உள்ளது? விரிவாக பார்ப்போம்.
பொதுசிவில் சட்டம்: இந்தியாவில் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக மக்களிடம் கருத்துக்கேட்டு உள்ளது இந்திய சட்ட ஆணையம். இந்த நிலையில் இந்தியாவில் சர்னா வழிபாட்டு முறையை பின்பற்றி வரும் பழங்குடியின மக்களும் பொதுசிவில் சட்டத்தின் மூலம் இந்துக்களாக்கப்படுவார்கள் என ஆதிவாசி அமைப்புகள் அச்சம் தெரிவித்து உள்ளன. தனித்த வழிபாட்டு முறைகள், திருமண சடங்குகளை கொண்ட சர்னா மதத்தை பின்பற்றும் பழங்குடிகளின் சடங்குகள் பொதுசிவில் சட்டத்தால் இல்லாமல் போகும் என்பது அவர்களின் அச்சம்.

இதன் மூலம் ஆதிவாசிகள் நிலம் பழங்குடி அல்லாதவர்களால் கையப்படுத்தும் என ஜார்க்கண்டில் 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி சொல்லும் பழங்குடிகள், முஸ்லிம், கிறிஸ்துவம், பார்சி, பௌத்தம், சீக்கியம், ஜெயின் மதத்தை பின்பற்றுவோரை தவிர மற்ற அனைவரும் இந்துக்கள் என்று பொதுசிவில் சட்டம் தெரிவிப்பதாகவும், இதனால், சர்னா மதத்தை பின்பற்றி வரும் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் வாழும் பழங்குடிகள், முண்டா இன பழங்குடிகள் இந்துக்களாக்கப்படும் நிலை உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றன.
சர்னா என்றால் என்ன?: இந்தியாவில் கோடிக்கணக்கான பழங்குடி மக்கள் தங்களுக்கென தனித்துவமான வழிபாட்டு முறைகளை கொண்டு உள்ளனர். இந்தியாவில் உள்ள இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், சீக்கியம், பௌத்தம், சமனம், ஜெயின மதம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட மதங்களுடன் இந்த பழங்குடி மக்களின் சடங்கு சம்பிரதாயங்கள் வேறுபட்டவையாக உள்ளன. இந்த நிலையில் பழங்குடியினரால் பின்பற்றப்படும் சர்னா என்ற வழிபாட்டு முறையை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஆதிவாசி செங்கல் அபியான் (ஏ.எஸ்.ஏ) என்ற அமைப்பு இதனை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. சர்னா மதம் நாட்டில் உள்ள 15 கோடி பழங்குடி மக்களின் அடையாளத்தை பிரதிபலிக்கிறது என்றும், 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் சர்னா மதத்திற்கு தனித்தனியாக குறியீடு இருந்ததாகவும் கூறப்படுகிறது. பழங்குடியினரின் பாரம்பரிய மத நம்பிக்கையான சர்னா, மலைகள், வனம் மற்றும் வனவிலங்குகள் போன்ற இயற்கையை முதலில் வணங்க வைக்கிறது.
ஜெயின்களை விட அதிகம்: கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் ஏற்கனவே சர்னா மதத்தை தனி மதமாக அங்கீகரிப்பதை ஆதரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலின ஆணையமும் சர்னா மதத்திற்கு மக்கள் தொகையில் மதக் குறியீட்டில் தனி பிரிவு வழங்க வேண்டும் என்று முன்மொழிந்து இருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், 50 லட்சத்துக்கும் அதிகமான பழங்குடி மக்கள் தங்கள் மதத்தை சர்னா என்று குறிப்பிட்டு இருக்கின்றன.
ஜெயின் மத மக்கள் எண்ணிக்கையான 44 லட்சத்தைவிட அதிகம். ஜெயின் மதத்திற்கு தனி மத அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ள நிலையில், சர்னா மதத்திற்கு இன்னும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. சர்னா தனி மத அந்தஸ்து கோரி கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி பாரத் பந்த் போராட்டத்தை பழங்குடியின அமைப்புகள் நடத்தின.












Click it and Unblock the Notifications