அரவணைக்கும் பாஜக.. அதிமுக எம்பி தம்பித்துரைக்கு புதிய பொறுப்பு.. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவும் நிலையில் தான் அவரது ஆதரவாளரான அதிமுக எம்பி தம்பித்துரைக்கு நாடாளுமன்ற சுகாதாரத்துறை சார்பில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் இப்போதே பாஜக களப்பணி ஆற்றி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக வியூகங்களை வகுக்க தொடங்கி உள்ளது.
2024 தேர்தல்.. பாஜகவின் ஆபரேசன் சவுத்! தமிழ்நாட்டில் இந்தி.. காசியில் தமிழா? - சுப.வீ. எச்சரிக்கை
பாஜக வியூகம்
குறிப்பாக தமிழகத்தில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார். அதன்பிறகு 2019ல் கன்னியாகுமரியில் இவர் தோல்வியடைந்தார். இதனால் தமிழகத்தில் பாஜகவுக்கு இருந்த ஒரு எம்பியின் எண்ணிக்கையும் பூஜ்ஜியமாகி உள்ளது. இதனால் தான் 2024 தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு எம்பிக்கள் தேர்வாக வேண்டும். இதற்கான பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என டெல்லி பாஜக மேலிடம் தமிழக பாஜவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளது. இதற்கான பணிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.
அதிமுக விவகாரத்தால் தலைவலி
இந்நிலையில் தான் கூட்டணியில் உள்ள அதிமுக உள்கட்சி பூசல் பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் கூட்டணி கட்சி என்ற முறையில் பாஜக கவலையில் உள்ளது. மேலும் ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக விரும்புகிறது. பாஜகவுக்கு தமிழகத்தில் பெரியளவில் செல்வாக்கு இல்லாத நிலையில் இதுதான் தமிழகத்தில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு சாதகமான அம்சமாக இருக்கும் என தாமரை நிர்வாகிகள் நினைக்கின்றனர்.
தம்பித்துரை சந்திப்பு
இதற்கிடையே தான் எடப்பாடி பழனிச்சாமி சில நாட்களுக்கு முன்பு 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பேசினார். அவரது பேச்சு என்பது அதிமுக என்பது தனது தலைமையில் தான் இயங்கும். இதில் ஓ பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களுக்கு இடமில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியிலும் இவர்கள் இடம்பெறமாட்டார்கள். தேவையெனில் பாஜகவை கூட கூட்டணியில் இருந்து கழற்றிவிட தயாராக இருக்கிறோம் என்ற வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு இருந்தது. இதையடுத்து பாஜகவின் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை, அதிமுக எம்பி தம்பித்துரை சமீபத்தில் சந்தித்து பேசினார். இந்த வேளையில் அதிமுக, பாஜக கூட்டணி தொடர்பாக இருவரும் சில முக்கிய விஷயங்களை பேசியதாக கூறப்படுகிறது.
புதிய பொறுப்பு
இந்நிலையில் தான் அதிமுக எம்பியாகவும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக உள்ளவருமான எம்பி தம்பித்துரைக்கு டெல்லயில் முக்கிய பொறுப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. அதிமுகவுக்கும், டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களுக்கும் இடையே தம்பித்துரை தான் பாலமாக உள்ள நிலையில் தான் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
என்ன பொறுப்பு?
அதன்படி நாடாளுமன்ற சுகாதார ஆலோசனை குழு உறுப்பினராக தம்பித்துரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த குழு என்பது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் இயங்கும். மத்திய சுகாதாரத்துறை செயல்படுத்தும் திட்டங்கள், கொள்கைகள் குறித்து ஆய்வு செய்யும் பணியை இந்த குழு மேற்கொண்டு வருகிறது. குழுவில் ஒவ்வொரு முறையும் உறுப்பினர்கள் மாற்றி அமைக்கப்படும் நிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்த எம்பிக்கள் உறுப்பினராக இடம்பெறுவார்கள். அந்த வகையில் தற்பாது தம்பித்துரை எம்பிக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
யார் இந்த தம்பித்துரை?
முன்னதாக 2015 முதல் 2019 வரை மத்திய பாஜக ஆட்சியில் தம்பித்துரைக்கு நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. அனைத்து கட்சியினரின் ஆதரவுடன் அவருக்கு இந்த பொறுப்பு ஒருமனதாக வழங்கப்பட்டது. அதன்பிறகு நடந்த 2019 தேர்தலில் தான் கரூரில் களமிறங்கிய தம்பித்துரை, காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணியிடம் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் 2009, 2014 என 2 முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தம்பித்துரை, கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து மாநிலங்களவை எம்பியாக தம்பித்துரை அதிமுக சார்பில் நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது நாடாளுமன்ற சுகாதார ஆலோசனை குழு உறுப்பினராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.