39க்கு 39.. ஒருபக்கம் மோடி.. இன்னொரு பக்கம் ஈபிஎஸ்! தம்பித்துரை சொன்ன வார்த்தை! திரும்பும் திமுக
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும். வரும் தேர்தலில் 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தான் மீண்டும் பிரதமராவார் எனவும், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றியும் அதிமுக ராஜ்யசபா எம்பி தம்பித்துரை முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து கூட்டணியை அமைத்துள்ளன. I-N-D-I-A என இந்த கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் ஆங்கில விரிவாக்கம் Indian National Developmental Inclusive Alliance என்பதாகும். தமிழில் கூற வேண்டும் என்றால் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என சொல்லலாம்.

இதற்கிடையே தான் நேற்று டெல்லியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பிற கட்சி தலைவர்கள் என மொத்தம் 38 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்
தமிழகத்தில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தம்பித்துரை எம்பி, தமாகா தலைவர் ஜிகே வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட மேலும் சிலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில் 2024 நாடாளுமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையில் எதிர்கொள்வது என ஒருமித்த கருத்துடன் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கொண்டு வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழிமொழிந்தார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்பி தம்பித்துரை கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், நானும் மீட்டிங்கில் பங்கேற்றாம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
மோடி தலைமையில் தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்படும். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளோம். இந்த கூட்டணி வெற்றி பெற உறுதியாக இருப்போம்.
கடந்த 2014ல் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களை நாங்கள் வென்றோம். இந்த முறை 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். இதன்மூலம் மோடியே மீண்டும் பிரதமராவார்'' என்றார்.












Click it and Unblock the Notifications