"இதுதான் ஒரே தீர்வு! புதின் & ஜெலன்ஸ்கியை நேரடியாகப் பேச சொன்னேன்!" பைடனிடம் விளக்கிய பிரதமர் மோடி
டெல்லி: அமெரிக்க அதிபர் பைடன் உடனான சந்திப்பின் போது, உக்ரைன் போர் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.
Recommended Video

நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் இடையே சந்திப்பு நடைபெற்றது. உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறை.
அதைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரை சந்தித்தனர்.

பிரதமர் மோடி
அமெரிக்க அதிபர் பைடன் உடனான சந்திப்பின் போது உக்ரைன் போரில் இந்தியா எடுத்துள்ள நடுநிலை நிலைப்பாடு குறித்து பிரதமர் மோடி விளக்கினார். இரு நாடுகளும் உக்ரைன் போர் குறித்த ஆலோசனையைத் தொடரப் போவதாகவும் குறிப்பிட்டார். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, உக்ரைனின் புச்சாவில் பொதுமக்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததையும் நினைவுபடுத்தினார். மேலும், இரு தரப்பிற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும் என அவர் தெரிவித்தார்.

நேரடி பேச்சுவார்த்தை
பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் தலைவர்களிடம் நான் பலமுறை பேசினேன். போர் குறித்து இரு தலைவர்களும் நேரடியாகப் பேச வேண்டும் என நான் வலியுறுத்தியுள்ளேன். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் அமைதிக்கு வழி வகுக்கும் என நம்புகிறோம்" என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். ரஷ்யா மீது சமீபத்தில் தான் அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்து இருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது.

அமெரிக்கா
அமெரிக்காவின் பல்வேறு அதிகாரிகளும் இந்தியாவின் இந்த நடுநிலை நிலைப்பாடுச் சரியானதாக இல்லை என்பதை வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, போருக்குப் பின்னர் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா குறைந்த விலையில் வாங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியான பின்னர், அமெரிக்கத் தலைவர்களின் அதிருப்தி கருத்துகள் அதிகரித்தன. உக்ரைன் போருக்குப் பின்னர், ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா சற்று கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என எதிர்பார்த்ததாக அமெரிக்க அதிபர் பைடனும் தெரிவித்திருந்தார்.

புச்சா தாக்குதல்
உக்ரைன் நாட்டிற்கு இந்தியா செய்யும் மனிதாபிமான உதவிகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்த பைடன், அதேநேரம் உக்ரைனில் அப்பாவி மக்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக விமர்சித்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய பிரதமர் மோடி, "சமீபத்தில், புச்சா நகரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட செய்தி மிகவும் கவலையளிக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக நியாயமான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். உக்ரைனில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கியம்.

இந்தியா அமெரிக்கா உறவு
கடந்த ஆண்டு செப்டம்பரில் நான் வாஷிங்டனுக்கு வந்தபோது, இந்தியா-அமெரிக்கக் கூட்டணி பல சர்வதேச பிரச்சனைகளுக்குத் தீர்வு உதவும் என்று நீங்கள் (பைடன்) சொன்னீர்கள். நான் உங்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன். உலகின் இரண்டு பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடுகளாக இயல்பாகவே கூட்டணி நாடுகளாகவே இருக்க முடியும்" என்றார். அதேநேரம் இரு தலைவர்களும் ஒன்றாக ரஷ்யாவின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுபோன்ற கண்டனம் எதுவும் கூறப்படவில்லை.












Click it and Unblock the Notifications