வக்கீல்களுக்கு எதிராக 'நுகர்வோர்’ சட்டத்தின் கீழ் கேஸ் போட முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி!
டெல்லி: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர்கள் சேவை வராது; வழக்கறிஞர்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் வழக்கறிஞர் சேவை தனித்துவமானது- இதர சேவைகளுடன் ஒப்பிட முடியாது எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

2007-ம் ஆண்டு தேசிய நுகர்வோர் தகராறுகள் தீர்ப்பாயமானது, வழக்கறிஞர்கள் சேவையையும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது. இதனடிப்படையில் வழக்கறிஞர்கள் சேவை மீது அதிருப்தி இருந்தால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம் என்கிற நிலை உருவானது. இதற்கு எதிராக பார் கவுன்சில், டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியேசன், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்டவை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில்
2009-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நுகர்வோர் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் திரிவேதி, பங்கஜ் மித்தல் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை கடந்த பிப்ரவரி மாதம் ஒத்தி வைத்திருந்தனர். இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.
உச்சநீதிமன்றம் அளித்த இத்தீர்ப்பில், வழக்கறிஞர்கள் சேவை தனித்துவமானது; நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது. மருத்துவர்கள் தங்களது சேவைகளை விளம்பரப்படுத்திக் கொள்ள முடியும்; மருத்துவமனை நிறுவனங்கள் தங்களது சேவைகளை விளம்பரப்படுத்தலாம். ஆனால் வழக்கறிஞர்கள் சேவை அப்படியானது அல்ல. இதர முறைசார் தொழில்களுக்கும் வழக்கறிஞர் சேவைக்கும் வேறுபாடு இருக்கிறது. வழக்கறிஞர் சேவை என்பது வர்த்தக நோக்கம் சார்ந்ததும் அல்ல. ஆகையால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர்கள் சேவையைக் கொண்டுவர முடியாது என தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications